தாடகை வதைப் படலம் - 347
347.
படியின்மேல் வெம்மையைப்
பகரினும். பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும்
வான் முகடும் வேம்;
விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்
வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில்.
வேறு யாவை வேவாதவே?
படியின்மேல் வெம்மையைப் பகரின் - இப்பாலை நிலத்தின்
வெப்பத்தைச் சொன்னாலும்; பகரும்நா முடியவேம்- சொல்லும் நாவும்
முழுதும் வெந்து போகும்; முடிய மூடு இருளும் வான்முகடும் வேம்
- முற்றும் மூடியுள்ள இருட்டும் வானத்து உச்சியும் வெந்து போகும்;
விடியுமேல் வெயிலும் வேம் - விடிந்த பின்னாயின் சூரியகிரணமுமே
வெந்து போகும்; மழையும்வேம் மின்னினோடு இடியும் வேம்
- மேகமும் மழையும் வேகும் மின்னலுடன் இடியும் வெந்து போகும்;
என்னில் வேவாதவை யாவை - என்று சொல்லக் கூடுமானால்
அப்பாலையின் வெப்பத்தால் வேகாதவை எவை? (ஒன்றுமில்லை
என்பதாம்).
படி: நிலம். இங்குப் பாலை நிலத்தை உணர்த்திற்று. வெம்மை:
வெப்பம். பண்புப்பெயர். பகரு நா: வினைத்தொகை. நாக்கு. சூரிய
வெப்பம் அப்பாலை நிலத்தின் மணல்முழுதும் படிந்து நீங்காத
வெப்பமடைந்து இரவிலும் கொதித்திருக்கும். விடிந்த பின் தோன்றும்
இளவெயிலையும் வேகச் செய்யும் என்பார் ‘ விடியுமேல்
வெயிலும்வேம்’ என்றார். வேறு+யாவை: வேறியாவை (குற்றியலிகரம்)
ஏ: வினா. 6
