மிதிலைக் காட்சிப் படலம் - 688
கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத் தன் மக்களில்
ஒருவனைச் செல்லுமாறு கூறல்
கோசிகன் அவனுக்குப் பதில் தன் மக்களுள்
ஒருவரை ஏகுமாறு சொல்ல அவர் மறுத்தல்
688.
‘மைத்துனனோடு முன்னோள்
வழங்கிய முறைமை கேளா.
“தத்துறல் ஒழி நீ; யானே
தடுப்பென். நின் உயிரை” என்னா.
புத்திரர் தம்மை நோக்கி.
“போக வேந்தோடும்” என்ன.
அத் தகு முனிவன் கூற.
அவர் மறுத்து அகறல் காணா.
முன்னோள் - (தனக்கு) முன் பிறந்தவளும்; மைத்துனனோடு -
(அவள் கணவனாகிய மைத்துனன்) ரிசிகனும்; வழங்கிய -
(பிள்ளையை) விலைக்குக் கொடுத்துவிட்ட; முறைமை - செய்கையை;
கேளா - கேட்டு; அத் தகு முனிவன் - தக்கவனாகிய அம்முனிவன்;
நீ - (சுனச்சேபனை நோக்கி) நீ; தத்துறல் ஒழி - அச்சப்படுவதை
நீக்குவாயாக; யானே நின் உயிரை - நானே உனது உயிரை;
தடுப்பேன் என்னா- காப்பேன் என்று கூறி; புத்திரர்தம்மை
நோக்கி - தன் மைந்தர்களைப் பார்த்து; வேந்தொடும் போக -
(உங்களில் ஒருவன்) இந்த அரசனுடன் (நரமேதத்திற்காக இவனுக்கு
ஈடாகச்) செல்லுக; என்னா கூற - என்று சொல்ல; அவர் மறுத்து
அகறல் - அம் மக்கள் அனைவரும் கட்டளையை மறுத்து நீக்குதலை;
காணா - கண்டு.
பெற்றோரால் கைவிடப்பட்ட தன் மருமகனுக்கு அபயம் அளித்து
என் மக்களில் யாரேனும் ஒருவன் இவனுக்குாகச் செல்லுக என்றான்
முனிவன்;ஆனால் அதற்கு ஒருவனும் உடன்படவில்லை. 125
