மிதிலைக் காட்சிப் படலம் - 575
மூவரும் மகளிரிசைகேடு ஏகல்
575.
வள் உகிர்த் தளிர்க் கை நோவ
மாடகம் பற்றி. வார்ந்த
கள் என நரம்பு வீக்கி.
கையொடு மனமும் கூட்டி.
வெள்ளிய முறுவல் தோன்ற.
விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன்
செவி மடுத்து. இனிது சென்றார்.
மகளிர் - அந்நகரத்துப் பெண்கள்; வள் உகிர்த் தளிர்க்கை -
கூர்மையான நகங்களையுடைய தளிர்போன்ற மெல்லிய (தம்)
கைவிரல்கள் வருந்தும்படி; மாடகம் பற்றி - வீணையின்
முறுக் காணிகளைப் பிடித்துத் திருகி; வார்ந்த கள்ளென - ஒழுகும்
தேன் தாரை போன்ற; நரம்பு வீக்கி - அந்த யாழ் நரம்பை
இறுக்கமாகக் கட்டி; கையொடு மனமும் கூட்டி - (அந்த நரம்புகளின்
மேல் வருடச் செல்கிற) கைவிரல்களின் குறிப்புடனே மனத்தையும்
பதியச் செய்து; வெள்ளிய முறுவல் தோன்ற - (தம்) வெண்
முறுவல் வெளிப்பட; விருந்து என ஈந்த - (புதிதாக
வந்தவர்க்குச்) சுவையான உணவு வழங்குதல் போல கொடுத்த;
தெள்விளிப் பாணி - தெளிந்த இசையோடு கூடிய பாட்டு
(என்னும்); தீம்தேன் - இனிய தேனை; செவி மடுத்து - இரு
காதுகளாலும் கேட்டு; இனிது சென்றார் - (அம்மூவரும்) இன்புற்றுச்
சென்றார்கள்.
வீணையும் விருந்தும் - வீணைவாசிப்போர்க்கு அவ் வாசிப்பால்
இயல்பாக மனமகிழ்ச்சியைக் காட்டும் இனிய பார்வையும்
புன்னகையும் தோன்றும். இதனை. விருந்தினரை இனிது நோக்கிப்
புன்னகை பூத்து உபசரிக்கும் செயலாக அமைந்துள்ளமையைக்
காணலாம். யாழ் உறுப்புகள்: கோடு. பத்தர். ஆணி. நரம்பு. மாடகம்.
மாடகம்: நால் விரல் அளவான பாலிகை வடிவாய் நரம்பை இறுக்கும்
கருவி. பாணித் தீம்தேன்: நாவுக்கு இனிமை தரும் தேன் போலக்
காதுக்கு இனிமை தரும் பாட்டு. விளிப்பாணி: வாய்ப்பாட்டு இசை. 11
