பூக் கொய் படலம் - 997

bookmark

ஒருத்தி மலர் தேடுவதுபோல் கணவனைத்
தேடித் திரிதல்

பல்திற மகளிர் ஆடவர்களின் செயல்கள்

கலித்துறை
 
997.

வந்து. எங்கும். தம் மன் உயிரேயோ.
   பிறிது ஒன்றோ?-
கந்தம் துன்றும் சோர் குழல்
   காணார்; கலை பேணார்;
அந்தம்தோறும் அற்று உகும் முத்தம்
   அவை பாரார்;-
சிந்தும் சந்தத் தே மலர்
   நாடித் திரிவாரும்;
 
கந்தம் துன்றும் -  (அம்மகளிர்)  மணம் நிரம்பியுள்ள; சோர்குழல்
காணார் - (தம்)  அவிழ்ந்துள்ள  கூந்தலைக்  கவனித்துப்  பாராமலும்;
கலை     பேணார் -  (இடையில் உடுத்திருந்த) ஆடை அவிழ்தலைப்
பொருட்படுத்தாமலும்;  அந்தம்  தோறும்  - (அச்சோலையின்) இறுதி
வரையிலும்;   அற்று  உரும்  முத்தம்  அவை  பாரார்  -  (ஓடும்
வேகத்தால்)  முத்துச்  சரங்கள்  அற்று  அற்று விழுவதை மதியாமலும்;
தம்மன்  உயிரேயோ?  -  (இவர்  தேடுவது) தமது உடம்பில் தங்கும்
தன்மையினையுடைய  உயிரைத் தானோ?; பிறிது ஒன்றோ? - (அன்றி)
வேறு  முக்கியமானதொரு  பொருளைத்   தானோ?  (என்று பார்ப்பவர்
கருதுமாறு)   ;  எங்கும்  வந்து  -  (அச்சோலையின்)  எவ்விடத்தும்
சென்று;  சிந்தும்  சந்தம்  தேன்மலர்  - (தேனைச்) சிந்துவனவாகிய
அழகிய மலர்களை; நாடித் திரிவாரும் - தேடித் திரிகின்றவர்களும். 

முதல்     பன்னிரு  கவிகளும்  ஆடவர்  மகளிர்  பலரின் ஆர்வ
நிகழ்ச்சிகளைத்   தொகுத்துச்    சுட்டுகின்றன.   உம்மையொடு  கூடிய
இறுதிச்  சொல்லோடு (ஆயினர்) எனும் சொல்லைக்  கூட்டிப்  பொருள்
முடிவு  கொள்க.)  மலர்களின்  மேல்   மங்கையருக்குள்ள  கொள்ளை
ஆசையை   அழகுறச்   சுட்டுகின்றார்.   கூந்தல்  சோர்வதும்.  உடை
சோர்வதும்.   முத்து   மாலைகள்    அறுவதும்.    பெண்டிர்  சிறிதும்
விரும்பாதவை.  பூக்கள்  மேல்  உள்ள விருப்பம்  இவ்  விரும்பாதவை
விளைவதையும் பொருட்படுத்தாமல் ஓடித்  திரிய  வைத்தன  என்பதாம்.
“காணார்   பேணார்  பாரார்  வந்து  எங்கும்  சிந்தும்   மலர்  நாடித்
திரிவாரும்”    என    வினைமுடிவு    கொள்க.    சோர்     குழல்:
வினைத்தொகை.                                           23