பரசுராமப் படலம் - 1353

bookmark

தயரதன் கெட்ட நிமித்தங்கள் கண்டு நிற்றல்

பறவைச் சகுனம்
 
1353.    

ஏகும் அளவையின் வந்தன.
   வலமும் மயில். இடமும்
காகம் முதலிய. முந்திய
   தடை செய்வன; கண்டான்;
நாகம் அனன். ‘இடை இங்கு உளது
   இடையூறு’ என நடவான்;
மாகம் மணி அணி தேரொடு
   நின்றான். நெறி வந்தான்.
 
ஏகும் அளவையின் - (இவ்வாறு) செல்கின்ற போது; மயில் - மயில்
(முதலிய   சில  பறவைகள்);   வலமும்  வந்தன  -   (சுபசகுனமாக)
வலப்புறமாகவும் வந்தன வாகி; காகம் முதலிய - காகம்  முதலான சில
பறவைகள்;  இடமும் -  (தீய சகுனமாக)  இடப்புறமாகவும்;  முந்திய -
முற்பட்டுச்     சென்றனவாகி;    தடை  செய்வன   கண்டான்   -
தடை   செய்வனவற்றைக்  கண்டான்;  நாகம்  அனன்  -   பெருமித
நடையழகால்)  யானையைப்  போன்றவனான தசரத  வேந்தன்;  ‘இங்கு
இடையூறு  உளது’ என - ‘இவ் வழியில் ஏதோ தடை ஏற்பட உள்ளது’
என்று;  நடவான்  -  (மேலும்)  செல்லாதவனானான்; நெறிவந்தான் -
அறநெறியின் வழி வந்தனாகிய தசரதன்; மாகம்மணி அணி  தேரொடு
நின்றான்  -  விண்  அளாவிய  அழகிய தேரோடு அங்கேயே  நின்று
விட்டான்.

சகுன     நூலார்.  கருடன்.  காடை. கழுகு.  ஆந்தை. உடும்பு. கீரி.
குரங்கு  முதலியவை  வலமிருந்து  இடம் போயின்  உத்தமம்  என்றும்.
நாரை.  காக்கை.  செம்போத்து. கிளி. கொக்கு. மயில். கோழி.  ஓணான்.
புள்ளிமான்.   புனுகுப்பூனை.   புலி.   நரி.   முதலியவை   வலமிருந்து
இடமாயின   உத்தமம்   என்றும்   உரைப்பவர்.    இவற்றுள்   இடம்
ஆகுபவை   வலமும்.    வலம்    ஆகுபவை    இடமும்    ஆயின்
சகுனத்தடையாம்.   தசரதனுக்கு  உத்தம  சகுனமும்  தடைச்  சகுனமும்
ஒருங்கு  நிகழ்ந்தனவாதலின்.  மேலே   பயணம்   தவிர்ந்து  நின்றான்.
மலை  போன்றவன் எனினும்  சகுனத்துக்கு  அஞ்சினான்;  “அஞ்சுவது
அஞ்சாமை  பேதைமை”  (திருக்.  422)   யாதலின்.   தொன்றுதொட்டு
அறநெறி  தவறாத  இட்சுவாகு  குலத்து  உதித்தவனாதலின்  தசரதனை
“நெறிவந்தான்”  என்றார். “நெறி வந்தான்  வலமும் வந்தன  (எனினும்)
காகம்   முதலியன   தடை  செய்வன   கண்டான்.   இடையூறுளதென
நடவான். நின்றான்” என வினை முடிபு செய்க.                    5