பகுதி 10
"குழந்தைகள் என்றாலே எனக்கு ஒரு தனி உற்சாகம். மனோகரின் நிலைமையில் நான் இருந்தால், தங்களை இந்த ஒரு குழந்தையோடு மட்டுமல்ல, தாங்கள் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் அத்தனை குழந்தைகளையும் சேர்த்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலும் செய்து கொள்ளத் தயாராயிருப்பேன்!"
மனோன்மணி கலகலவென்று சிரித்துவிட்டு, பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் அடிக்கும் கொட்டத்தை நீங்கள் ஒரு நாளைக்குப் பார்த்தால் அப்புறம் இம்மாதிரி சொல்ல மாட்டீர்கள்" என்றாள்.
பின்னர், "நான் தங்களுக்கு அவ்வளவு தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஒரு உதவி செய்தால் போதும். தயவு செய்து பண்ணையார் வீட்டுக்கு என்னை ஒரு தடவை அழைத்துப் போய் அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா?" என்று கேட்டாள்.
"பரஸ்பரம் நம்பிக்கை உள்ளவர்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்" என்றான் சந்திரசூடன்.
"அதில் என்ன சந்தேகம்?" என்றாள் மனோன்மணி.
"என்னிடம் உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கிறதா என்பது தான் சந்தேகம்."
"நிச்சயமாயிருக்கிறது. இல்லாவிடில் உங்களிடம் இந்த உதவி கேட்டிருப்பேனா?"
"நம்பிக்கையிருந்தால் என்னிடம் உண்மையைச் சொல்ல வேணும். பண்ணையாரைச் சந்திப்பதற்கு இவ்வளவு ஆவல் ஏன்?"
"நானே அதைச் சொல்லிவிட வேண்டும் என்றிருந்தேன். தாங்கள் கேட்டு விட்டீர்கள். முக்கியமான விஷயத்தை முதலில் சொல்லுகிறேன். ராஜ்மோகன் என் சொந்தக் குழந்தையல்ல" என்றாள் மனோன்மணி.
"அப்படியா? இதை மனோகரிடம் சொன்னீர்களா?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"இரண்டு மூன்று தடவை சொல்ல நினைத்தேன். ஏதோ தயக்கம் வந்து சொல்லவில்லை. சொந்தக் குழந்தையென்று சொல்லும் போதே இப்படி அதனிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்கிறாரே...?"
"ஆம், ஆம்! அவரிடம் சொல்லாமலிருப்பதே நல்லது. மற்ற விவரங்களைக் கூறுங்கள்!"
"ராஜ்மோகன் என் அருமைச் சிநேகிதியின் குழந்தை. அவள் பெயர் ஸுசேதா. அவளும் நானும் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாய் வளர்ந்தோம். ஒன்றாய்ப் படித்தோம். இரண்டு பேரும் கலியாணம் செய்து கொள்வதில்லை யென்றும், உத்தியோகம் பார்த்துச் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஸுசேதாவின் புத்தி தடுமாறி விட்டது. காதல் என்ற மூடத்தனத்தில் விழுந்து, யாரோ ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். அதானால் அவருக்கும் கேடு விளைவித்துத் தனக்கும் கேடு தேடிக் கொண்டாள். கேடு பின்னால் வந்தது. கலியாணமான புதிதில் அவர்கள் சந்தோஷமாய்த் தானிருந்தார்கள். மூன்று உலகத்திலும் தங்களுக்கு நிகரில்லை என்று இருந்தார்கள். பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அதனால் அவர்களுடைய கொண்டாட்டம் இன்னும் அதிகமேயாயிற்று. கொஞ்ச நாளைக்குப் பிறகு குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று தெரிந்தது. இதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. கால் ஊனத்தைக் குழந்தைப் பருவத்திலேயே சரிப்படுத்திவிடலாம் என்று கேள்விப்பட்டு அதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். குழந்தையை டாக்டர்களிடம் எடுத்துப் போவதே அவர்கள் வேலையாயிருந்தது.
