பகுதி 11

bookmark


"ஒரு சமயம் ஸுசேதாவின் கணவன் பம்பாய்க்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே குழந்தையின் கால் சிகிச்சையைப் பற்றியும் தெரிந்து கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனார். அந்தச் சமயத்தில் என் சினேகிதிக்கு 'டைபாய்டு' சுரம் வந்துவிட்டது. நான் தான் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். அவளுடைய விருப்பத்தின்படி பம்பாய்க்குத் தந்தி அடித்தேன். அவரும் மறுநாள் புறப்பட்டு ஆகாய விமானத்தில் வருவதாகப் பதில் தந்தி அடித்தார். துரதிர்ஷ்டத்தைக் கேளுங்கள். அவர் மறுநாள் வருவதற்குத் தான் விமானத்தில் 'ஸீட்' ரிஸர்வ் செய்திருந்தார். இதற்குள் அன்றைக்கே பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்படுவதாக இருந்த ஒரு சிநேகிதனைப் பார்த்தாராம். அவன், 'நான் இன்றைக்குப் போக முடியவில்லை; நீ போகிறாயா?" என்று கேட்டானாம். இவரும் 'சரி' என்றாராம். இதையெல்லாம் டிரங்க் டெலிபோன் மூலம் என்னிடம் தெரிவித்து, அன்று, சாயங்காலம் வந்து விடுவேன் என்றார். நானும் ஸுசேதாவிடம் சொன்னேன். அவள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. பேதைப் பெண்! அன்று பம்பாயிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னைக்கு வந்து சேரவில்லை. புயல் மழை காரணமாக விமானம் தறிகெட்டு எங்கேயோ விழுந்து எல்லோரும் இறந்திருக்க வேண்டும் என்று செய்தி வந்தது. இதை அறிந்த பிறகு ஸுசேதாவின் உடம்பு அதிகமாகிவிட்டது. பிழைத்து எழுந்திருக்கவேயில்லை. கண்ணை மூடுவதற்கு முன்னால் இந்த அநாதைக் குழந்தையைக் காப்பாற்றும்படி என்னிடம் வேண்டிக் கொண்டாள்..."

இச் சமயத்தில் மனோன்மணி விம்மினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின. கண்களை துடைத்து கொண்டு சில நிமிஷம் சும்மா இருந்து விட்டு, "அவ்வளவுதான் கதை! அது முதல் இக் குழந்தையை வளர்ப்பது எனது கடமையென்று கருதி வளர்த்து வருகிறேன்" என்றாள்.

"'தீபம்' பத்திரிகையின் பாதிக் கதையில் உங்களுக்கு ஏன் அவ்வளவு சிரத்தை என்பது இப்போது தெரிய வருகிறது" என்றேன்.

"ஆம்; கதையில் உள்ளது போலவே என் சிநேகிதியின் கதை ஆகிவிட்டது."

"அப்புறம் மிச்சத்தைச் சொல்லுங்கள்."

"மிச்சம் ஒன்றுமில்லையே!"

"பண்ணையாரைத் தாங்கள் பார்க்க விரும்புவது எதற்காக என்று சொல்லவில்லையே?"

"இந்தக் குழந்தையின் கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து சரியாக்க வேண்டுமென்று ஸுசேதாவுக்கு ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற வேண்டுமென்று பார்க்கிறேன். சிகிட்சைக்குப் பணம் அதிகமாக வேண்டியிருக்கிறது. பண்ணையார் தம் மகன் விஷயத்தில் கொடுமையாக நடந்து கொண்டாலும், தர்மவான் என்று கேள்வி..."

"போயும் போயும் இதற்காகவா, தெரியாத மனிதரிடம் போய் நிற்பார்கள்? ராஜ்மோகன் சிகிச்சைக்கு நானே ஏற்பாடு செய்வேனே?" என்றான் சந்திரசூடன்.

மனோன்மணி சற்று நேரம் சும்மா இருந்தாள்.

சந்திரசூடன், "நான் வரட்டுமா" என்றான்.

"ஆம்; நீங்கள் சொன்னது ரொம்பச் சரி. பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் எந்தக் காரியமும் செய்ய முடியாது. யாராவது ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டும். தங்களை நம்பிச் சொல்கிறேன். அப்புறம் ஆண்டவனுடைய சித்தம் போல் நடக்கட்டும்! பண்ணையார், மகனுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக, பேரனுக்கும் ஏதேனும் நல்லது செய்யட்டும் என்று பார்க்கிறேன். இந்த ஊர்ப் பண்ணையாரின் பேரன் தான் ராஜ்மோகன். என்னுடைய சிநேகிதி ஸுசேதா பண்ணையாரின் மகன் தர்மராஜனைத் தான் மணந்து கொண்டாள். இருவரும் இப்போது போய்விட்டார்கள். அவர்கள் மேல் பண்ணையாருக்கு இருந்த கோபத்தை இந்தப் பச்சைக் குழந்தையின் மேல் காட்டுவார் என்று நினைக்கிறீர்களா?"