நாட்டுப் படலம் - 41

bookmark

மள்ளர் களை பிடுங்காமல் நிற்றல்

41.  

பண்கள் வாய் மிழற்றும் இன்
   சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்
   களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மன்னர்,
   களைகலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம்
   பிழைப்பரோ, சிறியோர் பெற்றால்?
 
பண்கள்     இன்சொல்-  பண்கள்  இசைந்தது  போன்ற  இனிய
சொற்களை;  வாய்   மிழற்றும்   கடைசியர்-   வாயால்  பேசுகின்ற
உழத்தியரின்;  பரந்து  நீண்ட  கண்-  அகன்று நீண்ட கண்கள்; கை,
கால்,  முகம்,   வாய்   ஒக்கும்-  கைகள்,  கால்கள்,  முகம்,  வாய்
ஆலியவற்றை    ஒத்திருக்கும்;  களை  அலால்-  (குவளை,  தாமரை,
ஆம்பல் என்னும்   மலர்களாகிய) களைகளைத் தவிர; களை இலாமை-
வேறு  களைகள்  இல்லாமையால்; உண்கள் வார் கடைவாய் மள்ளர்-
கள்  ஒழுகும்  கடைவாயை  உடைய உழவர்கள்; களைகலாது உலாவி
நிற்பர்-  களைகளைக்   களையமாட்டாமல்  இங்குமங்குமாக  உலாவிக்
கொண்டிருப்பார்கள்; பெண்கள்பால்   வைத்த   நேயம்  சிறியோர்
பெற்றால்-  பெண்களிடம்   வைத்த  இச்சையைக்  கீழோர்  பெற்றால்;
பிழைப்பரோ- பிழைப்பார்களா (பிழைக்க மாட்டார் என்றபடி)

சுளைகளாக     உள்ள மலர்களெல்லாம் தங்கள் நேயத்துக்கு  உரிய
உழவர்  மகளிரின்  உறுப்புகள்  போன்று  இருத்தலால்,    அவற்றைக்
களையமாட்டாமல்  உழவர்களின் அறிவு தடுமாறினர்  என்பது  கருத்து.
கண்ணுக்குக்  குவளை;  கை  கால்  முகங்களுக்குத் தாமரை;   வாய்க்கு
ஆம்பல்   என்று   பொருத்தி  உணர்க.  ‘அற்ப    அறிவுடையவர்கள்
காமவயப்பட்டால்   பிழைக்கமாட்டார்கள்  என்பது  இறுதி    வரியால்
உணர்த்தப்   படுகின்ற   நெறியாகும்.  வேற்றுப்பொருள்    வைப்பணி,
(சிறப்புப்    பொருளை   வருணித்து   அதன்     பெறுபொருளாகஒரு
பொதுப்பொருளை விளக்குவது இவ்வணியின் தன்மை).

கடமையை     மறக்கச் செய்யும் காம வயப்பட்ட கீழோர் பிழையார்
என்பதைக்   கவிச்   சக்கரவர்த்தி  மேலே  சூர்ப்பணகை     சூழ்ச்சிப்
படலத்தில்  விளக்குவார்  (3141,  3142).  இந்திரன்  முதலோர்  தகுதிப்
பாடுடைய   நேயம்  பெற்றுப்  பொலிவதைச்  சுட்டும்    சூர்ப்பணகை
வாக்காக,  நன்மை  அவர்க்கு  இலை  உனக்கே’  என்றும்   ‘எங்ஙனம்
வைத்து  வாழ்தி’  என்றும்  கூறுகிறாள். இலக்கியத்    திறனாய்வரங்கில்
‘நன்மை  அவர்க்கு, இலை உனக்கு’ எனவும் ‘எப்படித் தான்   அவளை
வைத்து  வாழப்  போகிறாயோ’ எனவும் எதிரொலிப் பொருள்  தருவன
இந்தத் தொடர்கள். பெண்கள்பால் வைத்த நேயம் சிறியோர்   பெற்றால்
வாழார்  என்ற  இப் பாடலின் குறிப்பினைச் சூர்ப்பணகை   வாயிலாகக்
கவிச்  சக்கரவர்த்தி  உணர்த்தும்  குறிப்பினோடு ஒப்பிட்டு   உணர்தல்
தக்கது.   பெண்களிடம்   அன்பு  கொண்டால்,  தவிர்க்க   வேண்டிய
காலத்திலும், அதைத் தவிர்க்க மாட்டார்கள்’ என்ற கருத்துக்கு   ஏற்பப்
பொருள் கொள்ளவும் இடமுண்டு.                              10