நகரப் படலம் - 104
மதிற்பொறிகளும் - அவற்றின் ஆற்றலும்
104.
சினத்து அயில், கொலை வாள், சிலை, மழு, தண்டு,
சக்கரம், தோமரம், உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல்,
என்று இவை கணிப்பு இல: கொதுகின்
இனத்தையும், உவணத்து இறையையும்,
இயங்கும் காலையும், இதம் அல நினைவார்
மனத்தையும், எறியும் பொறி உள என்றால்,
மற்று இனி உணர்த்துவது எவனோ?
சினத்தயில் கொலைவாள்- சினம் மிக்க வேலும், பகைவரைக்
கொல்லும் வாளும்; சிலை, மழு, தண்டு சக்கரம் தோமரம் உலக்கை-
வில்லும் மழுவும் கதையும் சக்கரம் தோமரம், உலக்கை ஆகியவையும்;
கனத்திடை உருமின் வெருவரும் கவண்கல்- மேகத்திலுள்ள இடியும்
அஞ்சும்படியான கவண்கல்லும்; என்று இவை கணிப்புஇல- என்று
கூறப்படும் படைக்கலங்கள். அளவிட முடியாதவை; கொதுகின்
இனத்தையும்- கொசுக்களின் கூட்டத்தையும்; உவணத்து இறையையும் - பறவைகளின் வேந்தனான கருடனையும்; இயங்கும்
காலையும்- விரைந்து செல்லும் காற்றையும்; இதமல நினைவார்
மனத்தையும்- நன்மை யல்லாதவைகளை நினைப்பவர்
மனத்தினையும்; எறியும் பொறிஉள என்றால்- கொல்லவல்ல
இயந்திரங்களும் அந்த மதிலில் உள்ளன என்றால்; மற்ற இனி
உணர்த்துவது எவன்- மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன
இருக்கிறது.
சினத்து அயில் வீரர்களது கோபத்தை படையின் மேலேற்றிக்
கூறினார். அயோத்தி நகரத்தில் மதில் பல விதமான பொறிகளைத்
தன்னுள் கொண்டு, நல்ல காவலாயிருப்பதைக் கூறினார். அந்த
மதிலில் அமைந்துள்ள போர்க் கருவிகள் மிகச் சிறிய உயிரையும்
கொல்லும் என்பதற்குக் கொசுவையும் மிக உயரத்தில்
செல்லுவனவற்றையும் அழிக்கும் என்பதற்குக் கருடனையும்,
உருவமற்றவைகளையும் அழிக்கும் என்பதற்காக காற்றையும் மிக
விரைந்து செல்லும் காண இயலாதனவற்றையும் துணிக்கும் என்பதற்கு
மனத்தையும் கூறியுள்ள நயம் கருதத்தக்கது. உலக்கை: இரும்பு
உலக்கை. தோமரம்: ஈட்டி. கவண்கல்: கவணெறிகல்லாகும். 12
