பகுதி 7
வரும் போது மனோகரன், கைவண்டியிலிருந்த ராஜ் மோகனைப் பார்த்து, "ஏண்டா நொண்டிப் பயலே! என்னடா சேதி?" என்றான். அது சந்திரசூடன் காதில் நாராசமாக விழுந்தது. மனோன்மணி முகம் சுருங்குவதையும் கவனித்தான்.
"என்னடா நான் கேட்கிறேன், பேசாமலிருக்கிறாயே?" என்று சொல்லிக் கொண்டே மனோகரன் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகினான். குழந்தை 'வீல்' என்று அலறத் தொடங்கியது.
மனோன்மணி முகத்தில் கோபம் கொதித்தது. அவள் எழுந்தாள். அதற்குள் மனோகரன் குழந்தையின் காதை விட்டு விட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான். சந்திரசூடனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு, இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டான்.
"பேச்சின் நடுவில் 'டிஸ்டர்ப்' பண்ணுகிறேன் போலிருக்கிறது! மன்னிக்க வேணும்!" என்றான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்" என்றாள் மனோன்மணி.
"ஆம்; புறப்பட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் வருவதைப் பார்த்து விட்டுத் தான் தங்கினேன். 'புன்னைவனத்துப் புலி'யைப் பற்றிப் பத்திரிகையில் அமர்க்களப்படுகிறது! தாங்கள் துப்பாக்கி சகிதமாக மலை மேல் போய் விட்டு வருவதை தினம் பார்க்கிறேன். அதைப் பற்றித் தங்களிடம் விசாரிக்க விரும்பினேன்."
"ஓ! தங்களுக்கு வேட்டையில் பிரியம் உண்டா? ரொம்ப சந்தோஷம்! அந்தப் புலி ஒரு மாதமாய் எனக்கு 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டு வருகிறது. நீங்களும் வருவதாயிருந்தால்..."
"அழைத்துப் போனால் வரலாம் என்று தான் உத்தேசம். நான் இந்த ஊருக்குப் புதிது!"
"அப்படித் தான் நினைத்தேன் மனோன்மணி! இவரை எனக்கு நீ அறிமுகம் செய்து வைக்கவில்லையே?"
"அவருக்கு அந்தச் சிரமம் வேண்டியதில்லை. நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனக்கு மதராஸ். பெயர் சந்திரசுடன். வயது இருபத்து நாலு. போன வருஷம் பி.எல். பாஸ் செய்தேன். இன்னும் தொழில் ஆரம்பிக்கவில்லை. கலியாணம் ஆகவில்லை. செய்து கொள்வதாகவும் உத்தேசமில்லை. இன்னும் ஏதாவது தகவல் வேணுமானால் கேளுங்கள்..."
மனோகரன் இடி இடியென்று சிரித்து விட்டு, "ரொம்ப வந்தனம். நாளை மலை மேல் ஒரு வேளை புலியைச் சந்தித்தால் தங்களைத் தக்கபடி அதற்கு 'இண்டரட்யூஸ்' பண்ணி வைக்கலாம். நாளை வருகிறீர்கள் அல்லவா?" என்றான்.
"கட்டாயம் வருகிறேன், எங்கே சந்திக்கலாம்?"
"பண்ணையார் வீடு என்றால், எல்லோருக்கும் தெரியும். அல்லது நீங்கள் இருக்குமிடத்தைச் சொன்னால்..."
"ஸ்ரீதர் ஹோட்டலில் இருக்கிறேன். நாளை தங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறேன். போய் வரட்டுமா?"
இவ்விதம் இரண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு சந்திரசூடன் புறப்பட்டுச் சென்றான்.
தற்செயலாக அவன் பார்வை எதிரே தபால் ஆபீஸ் தாழ்வாரத்தில் நின்ற சாயபுவின் பேரில் விழுந்தது. அந்த சாயபு கையில் 'தீபம்' பத்திரிகையை வைத்துக் கொண்டு வாசிப்பதாகத் தோன்றியது.
"அடே அப்பா! 'தீபம்' பத்திரிகைக்கு எத்தனை கிராக்கி?" என்று எண்ணி வியந்து கொண்டே போனான்.
