திருமகள்துதி

திருமகள்துதி

bookmark


ராகம் - சக்ரவாகம் தாளம் - திஸ்ர ஏகம் 

நித்தமுனை வேண்டி மனம் 
  நினைப்ப தெல்லாம் நீயாய்ப் 
பித்தனைப் போல் வாழ்வதிலே 
  பெருமை யுண்டோ? திருவே! 
சித்தவுறுதி கொண்டிருந்தார்! 
  செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே 
உத்தம நிலை சேர்வ ரென்றே 
  உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம், 
சுத்த வெறும் பொய்யோடீ? 
  சுடர் மணியே! திருவே! 
மெத்த மையல் கொண்டு விட்டேன் 
  மேவிடுவாய், திருவே! 

உன்னையன்றி இன்ப முண்டோ 
  உலக மிசை வேறே? 
பொன்னை வடிவென் றுடையாய் 
  புத்தமுதே, திருவே! 
மின்னொளி தருநன் மணிகள் 
  மேடை யுயர்ந்த மாளிகைகள் 
வண்ண முடைய தாமரைப் பூ 
  மணிக்குள முள்ள சோலைகளும்; 
அன்னம் நறுநெய் பாலும் 
  அதிசயமாத் தருவாய்! 
நின்னருளை வாழ்த்தி என்றும் 
  நிலைத்திருப்பேன், திருவே! 

ஆடுகளும் மாடுகளும் 
  அழகுடைய பரியும் 
வீடுகளும் நெடுநிலமும் 
  விரைவினிலே தருவாய் 
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ? 
  எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ? 
வாடு நிலத்தைக் கண்டிரங்கா 
  மழையினைப் போல் உள்ள முண்டோ? 
நாடுமணிச் செல்வ மெல்லாம் 
  நன்கருள்வாய், திருவே! 
பீடுடைய வான் பொருளே 
  பெருங்களியே, திருவே!