திருமகளைச்சரண்புகுதல்

திருமகளைச்சரண்புகுதல்

bookmark


மாதவன் சக்தியினைச் - செய்ய 
  மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்! 
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப் 
  போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே 
வேதனைப் படுமனமும் - உயர் 
  வேதமும் வெறுப்புறச் சோர்மதியும் 
வாதனை பொறுக்கவில்லை - அன்னை 
  மாமக ளடியிணை சரண்புகுவோம். 

கீழ்களின் அவமதிப்பும் - தொழில் 
  கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே 
மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும் 
  முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும், 
ஏழ்கட லோடியுமோர் - பயன் 
  எய்திட வழியின்றி இருப்பதுவும் 
வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய 
  மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? 

பாற்கட லிடைப் பிறந்தாள் - அது 
  பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்; 
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில் 
  இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்; 
நாற்கரந் தானுடையாள் - அந்த 
  நான்கினும் பலவகைத் திருவுடையாள்! 
வேற்கரு விழியுடையாள் - செய்ய 
  மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 

நாரணன் மார்பினிலே - அன்பு 
  நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்; 
தோரணப் பந்தரிலும் - பசுத் 
  தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும், 
வீரர்தந் தோளினிலும் - உடல் 
  வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் 
பாரதி சிரத்தினிலும் - ஒளி 
  பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 

பொன்னிலும் மணிகளிலும் - நறும் 
  பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், 
கன்னியர் நகைப்பினிலும் - செழுங் 
  காட்டிலும் பொழிலிலும் கழனியிலும், 
முன்னிய துணிவினிலும் - மன்னர் 
  முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் 
பன்னிநற் புகழ்பாடி - அவள் 
  பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம். 

மண்ணினுட் கனிகளிலும் - மலை 
  வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும், 
புண்ணிய வேள்வியிலும் - உயர் 
  புகழிலும் மதியிலும் புதுமையிலும் 
பண்ணுநற் பாவையிலும் - நல்ல 
  பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் 
நண்ணிய தேவிதனை - எங்கள் 
  நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 

வெற்றிகொள் படையினிலும் - பல 
  விநயங்கள் அறிந்தவர் கடையிலும், 
நற்றவ நடையினிலும் - நல்ல 
  நாவலர் தேமொழித் தொடரினிலும் 
உற்றசெந் திருத்தாயை - நித்தம் 
  உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்; 
கற்றபல் கலைகளெல்லாம் - அவள் 
  கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.