திரு அவதாரப் படலம் - 255
வசிட்டனும் கலைக்கோட்டு
முனியும் அவையை அடைதல்
255.
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்.
கசட்டுறு வினைத்தொழில்- குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை
உடைய; கள்வராய் உழல் அசட்டர்கள் - கள்வர்களாகத் திரிகின்ற
அறிவிலிகள் போன்ற; ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும் - ஐம்
புலன்களையும் அற்றுப் போவாராகச் செய்த வசிட்டனும்; அருமறை
வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் - அரிய வேதங்களின் வடிவைப்
போல விளங்கும் சிறந்த முனிவனான கலைக்கோட்டு முனிவனும்;
வேத்தவை பொலிய மேவினார் -அந்த அரசவை பொலிவெய்துமாறு
அடைந்தனர்.
கசடு: குற்றம். வினைத்தொழில்: செயல். கள்வர்: களவு செய்வோன்
வஞ்சகராவர். உழல் அசட்டர்: வினைத் தொகை. அசடர்: அறிவிலிகள்
‘ஐவரை அறுவர் ஆக்கிய’ ஐம்புலன்களையும் தத்தம் நெறியில்
செல்லவிடாது தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து. ஆறு என்ற
எண்ணுப் பெயர்களை அமைத்த நயம் கருதத்தக்கது. வசிட்டன்
என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்பது பொருளாம். விசிட்டன்:
சிறந்தவன். அரிய மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம்
கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு முனிவனை.
வேந்து+அவை: வேத்தவை. வேந்தவைக்கு இம்முனிவர்களால்
பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.
ஐவரை அறுவராக்கிய வசிட்டனும் - மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும் - பொலிய மேவினார் என்பது பொருள் முடிவு. 76
