திரு அவதாரப் படலம் - 204

bookmark

204.

என்னை ஆளுடைய ஐயன்.
   கலுழன்மீது எழுந்து போய
பின்னர். வானவரை நோக்கி.
   பிதாமகன் பேசுகின்றான்;
“முன்னரே எண்கின் வேந்தன்
   யான்”- என. முடுகினேன்; மற்று.
அன்னவாறு எவரும் நீர்போய்
   ‘அவதரித்திடுமின்’ என்றான்.
 
என்னை ஆளுடைய ஐயன்-என்னை ஆட்கொண்ட தலைவனாகிய
திருமால்;  கலுழன்  மீது  எழுந்து  பொய்  பின்னர்-  கருடன்மீது
எழுந்தருளிச்  சென்றதன் பின்பு;  பிதாமகன்  வானவரை  நோக்கிப்
பேசுகின்றான்-  நான்முகன்.   தேவர்களைப்  பார்த்துப் பேசலானான்;
முன்னரே  எண்கின் வேந்தன் யான்  என  முடுகினேன்- முன்பே.
கரடிகட்கு   அரசனான   ‘சாம்பவந்தன்’   என்பவனாக  நான்  வந்து
பிறந்துள்ளேன்;    மற்று.  அன்னவாறு   நீர்   எவரும்   போய்
அவதரித்திடுமின் என்றான்- மற்றும். அப்படியே நீங்கள் எல்லோரும்
சென்று அவதரித்திடுவீராக என்று கூறினான்.

உயிரினங்களின்     தலைவர்களுக்  கெல்லாம்  தந்தை நான்முகன்
ஆதலின்   ‘பிதாமகன்’  என  பிரமனைக்  கூறுதல்   மரபு.  என்னை
ஆளுடைய  ஐயன் எனக் கூறியது. கம்பருக்குத்  திருமாலிடம்  மிகுந்த
ஈடுபாடு    இருந்ததைக்    காட்டும்.    முடுகினேன்:     கிட்டினேன்
(வந்திருக்கிறேன்  என்பது  பொருள்).  அவதரித்திடுமின்:   மின்னீற்று
வியங்கோள் கட்டளைப் பொருளில் வந்தது. மற்று:  வினைமாற்ற  வந்த
அசைச் சொல். அன்று ஆறு: அந்த விதமாக (அவ்வாறே).        25