திரு அவதாரப் படலம் - 194

bookmark

194.

பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற.
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்.
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து. அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.
 
பொன்வரை இழிவதோர்  புயலின்   பொற்பு   உற  -  பொன்
மலையாகிய மேருவிலிருந்து   கீழே  இறங்குகின்ற    ஒரு   மேகத்தின்
அழகுதோன்ற; என்னை ஆள் உடையவன் தோள்  நின்று- என்னை
ஆளாக   ஆட்கொண்டிருக்கும்   கலுழனுடைய  தோள்களில்  இருந்து;
வான்தடவும்  சென்னி  மண்டபத்தில் சேர்ந்து -  ஆகாய மளாவிய
சிகரத்தை   உடைய   அம்   மண்டபத்தை   அடைந்து;  அரிதுன்னு
பொற்பீடமேல் -  சிங்கவடிவுடைய   பொன்    ஆசனத்தின்   மேல்;
எம்பிரான் பொலிந்து தோன்றினான்-  எம்பெருமானாகிய   திருமால்
பொலிவுறத் தோன்றலானான்.

பெரிய     திருவடி என்றழைக்கப்படும்    திருமாலின்  ஊர்தியான
கருடனை    “என்னை   ஆளுடையவன்”   என்று     சிறப்பிக்கிறார்.
‘பொன்வரை’  என்று  கூறுவதால்  கருடனது   நிறமும்   மேன்மையும்
புலனாகும். அரிதுன்னு பொற்பீடம்: சிங்காதனம்.

‘தேவர்கள் இருந்த இடத்தில் வந்து காட்சிதந்த  திருமால்  கருடனது
தோளிலிருந்து       இறங்கி       அம்மண்டபத்தே      இடப்பட்ட
சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தான்’  என்பது கருத்து.  தோள்:   பிடர்
அரி: சிங்கம் (எல்லா மிருகங்களையும் அழிக்க வல்லது)            15