திரு அவதாரப் படலம் - 183
183.
‘அருந் தவ முனிவரும். அந்தணாளரும்.
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும். என் அகத்தை’ என்றனன்.
அருந்தவ முனிவரும் - அரியதவத்தை உடைய முனிவர்களும்;
அந்தணாளரும்- அறவோர்களாகிய அந்தணர்களும்; வருந்துதல்
இன்றியே- யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே; வாழ்வின் வைகினார்-
துன்பமற்று நல்வாழ்விலே இருந்தார்கள்; என்பின் இருந்துயர்
உழக்குநர்- (மக்கள் பேறில்லாத) எனது ஆட்சிக்குப் பிறகு (அப்
பெரியவர்கள்) மிகவும் துன்பத்தாலே வருந்துவார்களே; என்பதோர்
அருந்துயர்- என்பதொரு அரியதுயரமானது; என் அகத்தை வருத்தும்
என்றனன்- எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.
அருந்தவம் அருமைத்தவம் என்றதில் ‘மை’ கெட்டது.
அந்தணாளர்: அந்தண்மையை ஆளுபவர் எனவே அறவோர்.
வைகினார்: நிலைத்து உள்ளார் என்பதும் பொருளாம். இருந்துயர்:
மிகுந்த துன்பம். ‘இரு’ மிகுதியை உணர்த்தி நின்றது என்பின்:
எனக்குப் பிறகு. வருத்தும்: வருந்தச் செய்யும் என்பது பொருள்.
வாழ்வின்: வாழ்வு என்பதற்கு நல்வாழ்வு என்பது பொருள்.
தானும். தனது முன்னோரும் காத்த நெறிகளைத் தனக்குப் பிறகும்
பேணிக்காத்து. தனது நற்குணங்களையே பெற்று நாட்டை
நன்னெறியில் நிறுத்தி. ஆள. ஒரு புத்திரன் வேண்டுமே என
நினைத்த தயரதன் நல்லதந்தையாகத் திகழ்கிறான் எனலாம். 4
