திரு அவதாரப் படலம் - 181
181.
‘எம் குலத் தலைவர்கள். இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்.
மங்குநர் இல் என. வரம்பு இல் வையகம்.
இங்கு. நின் அருளினால். இனிதின் ஓம்பினேன்.
எம் குலத்தலைவர்கள்-எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும்;
இரவிதன்னினும் - தமது குல முதல்வனான சூரியனை விடவும்;
தம்குலம் விளங்குற - தங்கள் குலம் விளக்க முறும்படியாக;
தரணிதாங்கினார்- இவ்வுலகை ஆதரித்துக் காத்தனர்; மங்குநர்
இல்என- புகழில் மயங்கியவர்கள் இல்லை என்னுமாறு; வரம்பில்
வையகம் - எல்லைகாண இயலாத இவ்வுலகத்தை; இங்கு நின்
அருளினால்- இங்கு. இவ்வயோத்தியிலிருந்தே உனது அருளின்
உதவியால்; இனிதின் ஓம்பினேன்- இனிமையுறக் காத்து வந்தேன்.
தலைவர்கள்: குடிமக்களுக்குத் தலைமை பூண்டவர்களான
அரசர்கள் சூரியன் எங்கும் வெப்பத்தையும். ஒளியையும் பரப்பி.
உயிர்களைக் காப்பது போல. சூரிய குலவேந்தர்கள்
அச்சூரியனைக்காட்டிலும் சிறப்பாகத் தமது குலத்தை விளங்கச்
செய்தனர் என்பது கருத்து. மங்குதல்: அழிதல். குறைதல் என்னும்
பொருள் உடையது. இங்கு ‘மங்குநர்’ புகழில் குறைந்தவர் என்னும்
பொருளில் வந்தது. தரணி. ‘வையகம்’ இரண்டும் உலகம் என்ற
பொருள் உடையன. ‘மங்குநர்’ என்பதிலுள்ள ‘நர்’ பெயர் விகுதி.
‘வையகம்’ வையம் எனவும் வழங்கப்பெறும். 2
