தாடகை வதைப் படலம் - 413
இராமபாணம் தாடகையின்
மார்பில் ஊடுருவிச் சென்றது எனல்
413.
சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம். கரிய செம்மல்.
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்
விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது.
அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என. போயிற்று அன்றே!
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்- நிறைமொழி மாந்தரின்
சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை; கரிய
செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்- கரிய நிறமும்.
அழகும் உடைய இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய
தாடகையின் மீது செலுத்தி விடவே; வயிரக் குன்றக்கல் ஒக்கும்
நெஞ்சில் தங்காது - (அந்த அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற
அத்தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்; அப்புறம் கழன்று -
(நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக் கழன்று;
கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என - கல்வி
அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல
பொருளைப் போல; போயிற்று - ஓடிப்போய்விட்டது.
‘சொல்’ என்று பொதுவாகக் கூறினாலும். நிறை மொழி மாந்தரின்
மறை மொழியையே குறித்து நின்றதென்க. - உறுதி. சுடுசரம்: சுடுகின்ற
அம்பு. இராமனுடைய அம்புக்குக் கடுமை. வேகம். அருமை ஆகிய
பண்புகள் உண்டாம் என்பதை உணர்த்தினார். கரிய செம்மல்: கருநில
அழகன். அல்: இருட்டு. இராமது அம்பு மார்பில் புகுந்து.
முதுகின்புறம் போந்தது என்பதை உணர்த்த ‘அப்புறம் கழன்று’
என்றார். கல்வியறிவில்லாத கீழோருக்கு அறிவாற்றல் மிக்க மேலோர்
கூறும் அறம் உள்ளத்தில் நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறுகாது
வழிப்போவதுபோல. தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு
விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது. 50
