தாடகை வதைப் படலம் - 414
இராமபாணம் பட்டுத் தாடகை கீழே வீழ்தல்
414.
பொன் நெடுங் குன்றம் அன்னான். புகர்
முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
அடித்தலும். - இடித்து. வானில்
கல் நெடு மாரி பெய்யக்
கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
வீழ்வதே போல - வீழ்ந்தாள்.
பொன் நெடும் குன்றம் அன்னான் - நீண்டு. உயர்ந்த பொன்
மலையாகிய மேருமலையைப் போன்ற சலியாத் தன்மை வாய்ந்த
இராமபிரானது; புகர்முகப் பகழி என்னும் - முன்புறம்
புள்ளிகளையுடைய அம்பு என்ற; அ நெடும் கால வன் காற்று -
நெடிய. கடையூழிக் காலத்து வலியகாற்று; அடித்தலும் - அடித்த
உடனே; இடித்து வானில் கல்நெடுமாரி பெய்ய - வானத்தே இடி
முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம்
- யுகத்தின் கடைசியில் எழுந்த மேகமானது; மின் ஓடும்
அசனியோடும் - மின்னலோடும். இடியோடும் வீழ்வதே போல
வீழ்ந்தாள்- வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள்.
கரிய நிறத்தினனான ராமனைப் ‘பொன் நெடுங்குன்றம்’ என்றது
நிறம் கருதியன்று. சலியாத்தன்மை கருதியே யாகும். புகர்: புள்ளி.
முகம்: முன்புறம் பகழி: அம்பு. கடையுகம்: யுகக்கடை. சொல்மாற்று.
மேகம்: புயல். தாடகைக்கு மேகம் உவமை. அவளது கூந்தலும் குரலும்
மின்னலும் இடியும் போன்றவை என்க. இராமபிரானது அம்பாகிய
கால வன் காற்று அடித்ததும். இடி. மின்னலோடு கூடிய ஊழிக்
காலத்து மேகம் வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள் என்க 51
