தாடகை வதைப் படலம் - 404

bookmark

இவள் பெண் அல்லள் எனல்

404.

‘கறங்கு அடல் திகிரிப்
   படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்!
   பெரியோரொடும்
மறம்கொடு. இத் தரை மன்னுயிர்
   மாய்த்து. நின்று.
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும்
   வேண்டுமே?
  
கறங்கு  அடல் திகிரிப்படி காத்தவர்-  எங்கும்  சுழன்று  வரும்
ஆணையாகிய   சக்கரம்  செலுத்தி  உலகைக்  காத்தவர்;  பிறங்கடை
பெரியோய்  -   மரபில்   வந்த   பெரியோனே!;   ‘மறம்   கொடு
பெரியோரொடும்  - பாவச் செயலை மேற்கொண்டு. பெரியோர்களாகிய
முனிவரோடும்; இத்தரை  மன்  உயிர்மாய்த்து  நின்று - இப்பூமியில்
உள்ள  உயிர்களை  எல்லாம்  அழித்து  நின்று; அறம் கெடுத்தவட்கு
ஆண்மையும்  வேண்டுமோ  - அறத்தை அழித்தவளாகிய  இவளுக்கு
ஆண்வடிவம் வேண்டுவதோ!

கறங்குதல்:     சுழல்தல். திகிரி: ஆணையாகிய சக்கரம். படி:  நிலம்.
காத்தவர்:  சூரிய  குலத்தரசர்கள். பிறங்கல்: விளங்கல்.   மறம்:  பாவம்.
அடைபெரியோய்;  வினைத்தொகை. மன்னுயிர்: நிலைபெற்ற   உயிர்கள்.
மாய்த்து: அழித்து.’’ ஆண்மை: இங்கு ஆண்வடிவத்தை   உணர்த்திற்று.
சூரிய  குலத்தரசர்  மேலும்  விளக்கமுறவந்து  தோன்றிய    ராமனைப்
‘பெரியோய்’  என்றார்.  பெண்  உருவிலே இத்தனை  பேரழிவு  செய்து
அறம்கெடுத்த     இவளுக்கு    ஆண்    உருவம்     வேண்டுமோ?
வேண்டுவதில்லை. என்பது கருத்து.                             41