சித்திரகூடப் படலம் - 2158
2158.
‘நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும்
நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில்,
வயின்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர்
எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு
அகணமா வருவன - காணாய்!
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர் இழை! - (மனத்தால்)
நினைக்கும்போதும் அமுதத்தை உண்டாற்போல மகிழ்ச்சி யூட்டுகின்ற
நேரிய அணிகளை அணிந்தவளே!;நிறைதேன் வனைந்த வேங்கையில் -
மிகுந்த தேனால் நிறைந்த வேங்கை மரத்தினிலும்; கோங்கினில் - கோங்க
மரத்தினிலும்; வயின் தொறும் தொடுத்துக் குனிந்த ஊசலில்-பக்கங்கள்
தோறும் கட்டி வளைத்து ஆடுகின்ற ஊஞ்சலில்; கொடிச்சியர் எடுத்த
இன்குறிஞ்சி கனிந்த பாடல் கேட்டு - குறமகளிர் பாடிய இனிய
குறிஞ்சிப் புண்ணால் பதம்நிறைந்த பாடல் ஓசை கேட்டு; அசுண மா -
(இசை விரும்பும்) அசுண மாக்கள்; வருவன -ஓடி வருவனவற்றை;
காணாய் -.
‘நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும்’ - ‘உள்ளக் களித்தலும்’ என்ற
குறள் (1281) ஒப்புநோக்குக. அகணம் - இனிய இசையை நுகர வரும்
விலங்கு. ஒருவகைப் பறவை என்பாரும் உளர்(பிங்கலந்தை);
இன்னோசையை முதற்கண் எழுப்பி இவ்விலங்கினை வரவழைத்து. அது
இனிய இசையில்சொக்கித் தன்னை மறந்து நின்றவழி வலிய ஓசையை
எழுப்பி அதனை இறந்துபடச் செய்து பிடிப்பது குன்றவர் வழக்கம். பறை
பட வாழா அகணமா (நான்மணி.2.) என்பது காண்க.
அகணம் ஒருவகைத மான் என்பர். அது இவ்வியல்பினது என்பதனை
‘மறையின் தன் யாழ்கேட்டமானை அருளாது அறைகொன்று மற்றதன் ஆர்
உயிர் எஞ்ச. பறை அறைந்தாங்கு (கலித்.143: 10-12) என்ற பாடற் பகுதியால்
அறிக. 24
