கையடைப் படலம் - 339

bookmark

மூவரும் ஒருசோலையை அடைதல்

339.

கரும்பு கால் பொரக் கமுகு வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்.
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார்.
 
கரும்பு  கால்பொர-  கரும்புச்  சோலையிலே  காற்று  வீசுவதால்;
கமுகு  வார்ந்த  தேன்  -  கமுகு  மரங்களிலே பெருகிவரும் தேன்;
வரம்புமீறிடும்  - வரப்பை மீறிச் செல்லும்படியான; மருதவேலிவாய்-
மருத  நிலங்களிலே;   அரும்பு   கொங்கையார்   - தோன்றிவரும்
தனங்களையுடைய  இளமாதரது;  அம்மென்  ஒதிபோல்  - அழகிய.
மென்மையான  கூந்தலைப்  போலக்  கறுத்த;  சுரும்பு வாழ்வது ஓர்
சோலை  நண்ணினார்  -  வண்டுகள்  வாழ்கின்ற  ஒரு சோலையை
அம்மூவரும் அடைந்தனர்.

கால்: காற்று. பொருதல்: வீசுதல். வார்ந்த: பெருகிய. வரம்பு: வரப்பு.
மருதவேலி: மருதநிலம். அரும்புதல்:  தோன்றுதல்.  அரும்பு கொங்கை’
வினைத்தொகையாம்.    ஓதி:   கூந்தல்.  வண்டின்  கரு   நிறத்துக்கு
உவமையாகக் கூறப்பட்டது.                                 23