கோவிந்தன்பாட்டு

கோவிந்தன்பாட்டு

bookmark

கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து 
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப் 
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் 
கோவிந்தா! பேணி னோர்க்கு 

நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய் 
சராசரத்து நாதா! நாளும் 
எண்ணிரண்டு கோடியினும், மிகப்பலவாம் 
வீண்கவலை எளிய னேற்கே. 

எளியனேன் யானெனலை எப்போது 
போக்கிடுவாய், இறைவனே! இவ் 
வளியிலே பறவையிலே மரத்தினிலே 
முகிலினிலே வரம்பில் வான 

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே 
வீதியிலே வீட்டி லெல்லாம் 
களியிலே கோவிந்தா! நினைக்கண்டு 
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 

என்கண்ணை மறந்துனிரு கண்களையே 
என்னகத்தில் இசைத்துக் கொண்டு 
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே 
நான்கண்டு நிறைவு கொண்டு 

வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற் 
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற் 
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா 
எனக்கமுதம் புகட்டு வாயே.