கண்ணனைவேண்டுதல்

கண்ணனைவேண்டுதல்

bookmark


வேத வானில் விளங்கி அறஞ்செய்மின் 
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் 
தீத கற்றுமின் என்று திசையெலாம் 
மோத நித்தம் இடித்து முழங்கியே 

உண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே 
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும் 
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும் 
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே. 

எங்க ளாரிய பூமியெனும் பயிர் 
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும் 
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச் 
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம். 

வீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற் 
பார தர்செய் தவத்தின் பயனெனும் 
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர் 
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ. 

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே 
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும் 
உன்னுங் காலை உயர்துணை யாகவே 
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம். 

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம் 
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே, 
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச் 
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால். 

ஒப்பிலாத உயர்வொடு கல்வியும் 
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும், 
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம் 
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால். 

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல் 
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள் 
கொற்றவா! நின் குவலய மீதினில் 
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம். 

நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப் 
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண், 
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல் 
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.