குலமுறை கிளத்து படலம் - 725

bookmark

மாந்தாதா

725.

‘கருதல் அரும் பெருங் குணத்தோர்.
   இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு
   சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-
   புலிப் போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண.
   உலகு ஆண்டான் உளன் ஒருவன்.
 
பொருது உறை- போர்புரிந்த பின்  உறையில்; சேர் வேலினாய் -
செருகிய   வேற்படையை  உடைய  சனகனே!;  சுடர்நேமி  செல  -
ஒளியுடைய   தமது   ஆணைச்  சக்கரம்  (எங்கும்   தடையில்லாமல்)
செல்லுமாறு;  திரிபுவனம்  - மூன்று உலகங்களையும்; முழுது ஆண்டு
நின்றோர் - முழுவதும் ஆட்சி புரிந்தவர்களும்; கருதல் அரும்பெரும்
-  நினைக்கவும்  முடியாத  (இரக்கம் முதலிய) சிறந்த;  குணத்தோர் -
குணங்களையுடையவர்களும்   ஆகிய;   இவர்   முதலோர்   - இக்
குமாரர்களின்  குலத்திலே  தோன்றிய  முந்தைய  அரசர்கள்; கணக்கு
இறந்தோர்   -   எண்ணற்றவர்கள்   (இவர்   குலத்துள்)   ஒருவன்;
புலிப்போத்தும்  -  (இயல்பாகவே  பகைமையுடைய) ஆண்புலிகளும்;
புல்வாயும்  - மான்களும்; ஒருதுறையில் - (அப் பகையுணர்ச்சியின்றி)
ஒரே   நீர்த்துறையிலே;   நீர்   உண்ண   -  (இறங்கித்)  தண்ணீர்
குடிக்கும்படி;   உலகு  ஆண்டோன்  -  உலகத்தை  அரசாண்டவன்;
ஒருவன் உளன் - (மாந்தாதா) இருந்தான்.  

அரசனது     ஆணையிடத்துத்   தமக்குள்ள அச்சத்தால் எவையும்
நலியத்தக்கனவும்  நலியாமல்  உள்ள நீதிமுறை  கூறியது. இந்த அரசன்
மாந்தாதா  என்பவன்.   அவன்   அரசாண்ட  காலத்தில்  நாடெங்கும்
சத்துவ  குணம் நிலவியிருந்ததால் மிருகங்கள்  முதலியனவும்   அன்பும்
அருளும்   பூண்டு    வாழ்ந்தன.   புல்    வாய்  -  புல்லையுண்ணும்
வாயையுடைய     (மான்)     -     காரணப்பெயர்.     வேற்றுமைத்
தொகையன்மொழி.                                          5