கார்முகப் படலம் - 813

bookmark

சனகன் கோசிகனை நோக்கிக் கூறத் தொடங்குதல்

சனகன் உவந்து கோசிகனிடம் திருமணம் குறித்து வினாவுதல்
 
813.

ஆசையுற்று அயர்பவள் அன்னள் ஆயினள்;
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி. அக்
கோசிகற்கு ஒரு மொழி. சனகன் கூறுவான்;
 
ஆசை உற்று- காதல் பெருகி; அயர்பவள் - தளர்பவளான  சீதை;
அன்னள்  ஆயினள் - அவ்வாறான நிலையில்  இருந்தாள் (அவ்வாறு
அது  இருக்க); சனகன் - சனக  மன்னன்; பாசு அடை -  பசுமையான
இலைகளையுடைய;  கமலத்தோன்  -  தாமரையில்  தங்கும்   பிரமன்;
படைத்த  வில்  இறும்  -  படைத்த வில் இற்று வீழ்ந்த; ஓசையின்-
ஓசையைக்  கேட்டதால்;  பெரியதோர்   உவகை  -  மிக   ஒப்பற்ற
மகிழ்ச்சியடைந்து;  அக்  கோசிகற்கு -அந்த விசுவாமித்திரனுக்கு; ஒரு
மொழி கூறுவான் - ஒரு வார்த்தை சொல்லலானான்.

வில்லை     வளைத்தல் என்பது  நடைபெறுமா   என்று   ஏங்கிக்
கொண்டிருந்த  சனகன்  வில்  இறுத்த   ஓசை  கேட்டும்   பேருவகை
கொண்டான் என்பது.                                       64