கார்முகப் படலம் - 791

bookmark

நகரமாந்தர்கூற்று (791-792)

மிதிலை நகர மக்களின் உவகை மொழிகள்
 
791.

‘தயரதன் புதல்வன்’ என்பார்;
   ‘தாமரைக் கண்ணன்’ என்பார்;
‘புயல் இவன் மேனி’ என்பார்;
   ‘பூவையே பொருவும்’ என்பார்;
‘மயல் உடைத்து உலகம்’ என்பார்;
   ‘மானிடன் அல்லன்’ என்பார்;
‘கயல் பொரு கடலுள் வைகும்
   கடவுளே காணும்’ என்பார்.
 
(அந்நகர மக்களில் சிலர்); தயரதன் புதல்வன்  என்பார் - (இவன்)
தயரதன்  திருமகன் என்று கூறுவார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்
-   (சிலர்  இவன்)  செந்தாமரைக்  கண்ணனான  திருமாலே    என்று
சொல்வார்கள்;  இவன்  மேனி  -  (சிலர்)  இவனது மேனியின் நிறம்;
புயல்  என்பார்  - கருமேகம்  என்பார்கள்;  பூவையும் பொருவும் -
(தவிர) காயாம் பூவையும் ஒத்துள்ளது; என்பார் - என்பார்கள்   (சிலர்);
மானிடன்  அல்லன்  -  (எவ்வாறாயினும் இவன்) மானுடன்  அல்லன்;
என்பார் -  என்று   கூறுவார்கள்  (சிலர்);  கயல்  பொரு  கடலுள்-
(பின்னை  இவன்  யாரென்றால்)  கயல்மீன்களையுடைய    பாற்கடலில்;
வைகும் கடவுளே - தங்கியுள்ள திருமாலே ஆவான்; என்பர் - என்று
சொல்வார்கள்;  மயல்  உடைத்து உலகம் - இந்த உலகத்தின் இயல்பு
மயக்கம்  உடையது;  என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்) (இவ்வாறு
மக்கள் பலபடி கூறினர்).

பூவையும் - இறந்தது தழீஇய எச்ச உம்மை.                   42