கடிமணப் படலம் - 1339

bookmark

மணமகன் தாயர் மூவரையும் வணங்கல்

அன்னையரை வணங்குதல்
 
1339.    

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.
 
கேகயன்    மாமகள்  கேழ்கிளர்  பாதம்  -  (இராமன்)  கேகய
மன்னனின்   மகளான    கைகேயியின்    ஒளிமிகுந்த   திருவடிகளை;
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா - (தன்னைப்பெற்ற) தாயான
கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக்காட்டிலும் மிகு அன்புடனே
வீழ்ந்துவணங்கி;  ஆய  தன்  அன்னை அடித்துணை சூடி - (பின்பு)
தன்னைப்  பெற்ற தாயான  கோசலையின்  இணையடிகளைத்  தலைக்கு
அணியாகச்  சூடி. (வணங்கி); தூய சுமித்திரை தாள் தொழலோடும் -
(அதன்பின்பு)    உளத்    தூய்மை    மிக்கவளான    சுமித்திரையின்
திருவடிகளை வணங்கிய அளவிலே.

இப்பாடல்     குளகம். அடுத்தபாடல்  கருத்தொடு  முடியும். “தாய்
கையில்  வளர்ந்திலன்; வளர்த்தது  தவத்தால்    கேகயன்  மடந்தை”
(யிடம்)  (கம்ப. 1591) என்பர் ஆதலாலும். இனிவரும்  அவதார  நோக்க
நிகழ்ச்சிகள்   யாவுக்கும்  இவள்  வித்தாவாள்   என   உணர்தலாலும்.
“தாயினும்  அன்பொடு தாழ்ந்து” கைகேயியை  வணங்கினான்  என்றார்.
அடியாரின்  ஏவல்  செய்தி  என  இராமனைக்   காப்பதற்காகத்   தன்
மகனைத்   தொடக்கத்திலிருந்தே    அர்ப்பணித்த  தூய   நெஞ்சினள்
ஆதலின். “தூய சுமத்திரை” என்றார்.  இராமனைப்  பயந்த எற்கு இடர்
உண்டோ?” (கம்ப. 1453) என்று தன் வாயால்  உரைத்தாள்  அல்லளோ.
மந்தரை  நுழையு  முன்  இந்த மாதரசி கைகேயி.  இதனால்  அன்றோ.
“என்னையீன்ற   எம்பிராட்டி”   (கம்ப.   10081)   என்று   பெருமான்
ஏத்தியதும்  என்க.  இறுதியில்  இராமபிரான் “தீயள்  என்று  நீ துறந்த
என்தெய்வம்” (கம்ப. 10079) என்றதும் உணர்க.                  94