கடிமணப் படலம் - 1303

bookmark

நவமணிமாலை அணிதல்

1303.    

தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்.
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்.
மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து.
வான் இடு வில் என. வயங்கிக் காட்டவே;
 
தேன்    உடை மலர் மகள்- தேனையுடைய செந்தாமரை மலரில்
வீற்றிருக்கும்  திருமகள்;  திளைக்கும்  மார்பினில் -  மகிழ்ந்துறையும்
(திரு)  மார்பில்; தான்  இடை விளங்கிய  தகையின் ஆரம் தான் -
இடையே   விளங்குகிற    அழகிய    (பல்வகை   மணிகள்   பதித்த)
மாலையானது; மீனொடு  சுடர்விட  விளங்கும்  மேகத்து வான் இடு
வில் என- விண்மீன்களொடு  ஒளிர்கின்ற  மேகக்  கூட்டத்தில்  வான்
வில்லும்  எழுந்தது   போன்று;  வயங்கிக்  காட்டவே  -  விளங்கித்
தோன்றுமாறு (இராமன் அணிந்தான்.)

மார்பு  கார் மேகத்திற்கும் மணிமாலையின் பல்வகை  மணிகள் விண்
மீன்களுக்கும்.   அவற்றின்  ஒளிக்கூட்டம்  வான்   இடு   வில்லிற்கும்
உவமைகள் ஆயின.  மேகத்தில்   விண்மீன்கள்  விளங்கித்  தோன்றா;
இங்குத்  தோன்றின   என்பதால்  இல்பொருள்  உவமையணி.  தான்-
அசைகள்.  வான்  இடுவில்:   இந்திரவில்.   “வானிடு  வில்லின்  வரவு
அறியா வாய்மையால்” (நாலடி. 1).                              58