கடிமணப் படலம் - 1291

bookmark

கவிக் கூற்று

1291.    

தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற.
விராவின. குவிந்தன. விளம்ப வேண்டுமோ?
அரா - அணை துறந்து போந்து. அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம்அரோ:
 
தராதலம்  முதல்  உலகு  அனைத்தும்   தள்ளுற  விராவின;
குவிந்தன  -   பூவுலகம்   முதலான    எல்லா   உலகத்துள்ளோரும்
(இத்திருமணத்தைக் காண வேண்டும் எனும்  ஆசையின்   உந்துதலால்)
வந்துகலந்து  குவிந்தனர்;  விளம்ப   வேண்டுமோ?  -  யாம் இனித்
தனித்தனியாக  எடுத்தியம்ப  வேண்டுமா?   (இல்லையாதலால்);  அரா
அணை துறந்து போந்து - ஆதிசேடன் எனும்  பாம்பின் படுக்கையை
நீங்கி வந்து; அயோத்தி எய்திய - (மன்பதையைக்  காக்க)  அயோத்தி
நகரில் அவதரித்துள்ள;   இராகவன்  செய்கையை  விளம்புவாம்  -
இராம பிரானது செய்தியை (இனிக்) கூறத் தொடங்குவோம்.

அரோ     -  அசை.  தராதலம்:   பூமியாகிய   இடம்.  தள்ளுறல்:
(ஆசையின்)  உந்துதல்.  எல்லா  உலகத்தோரும்   வந்து   குவிதலின்.
இன்னார்  இவ்வுலகினர் என  எடுத்தியம்பல் இயலாததாயிற்று  என்பார்.
“உலகு அனைத்தும் விராவின;குவிந்தன” என்றார்.               47