எதிர்கொள் படலம் - 1119

bookmark

சனகன் படை வருணனை

தயரத மன்னனின் தானைச் சிறப்பு

கலிவிருத்தம்

1119.    

இலை குலாவு அயிலினான்
   அனிகம். ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர்
   நெடிய மா கடல் எலாம்.
அலகு இல் மா களிறு. தேர்.
   புரவி. ஆள். என விராய்.
உலகு எலாம் நிமிர்வதே
   பொருவும் ஓர் உவமையே.
 
இலைகுலாவு அயிலினான் அனிகம்- அரசிலை வடிவுடன் திகழும்
கூரிய  வேற்படையினை  ஏந்திய  தசரதனின்  சேனைக்கு;   ஏழ் என
உலாம்  -  ஏழு என்னும் எண்ணிக்கை கொண்டனவாய்; நிலை குலாம்
மகரநீர் நெடியமா  கடல்  எலாம்  -  நிலைபெற்று  விளங்கும். சுறா
மீன்கள்  உலாவும்.  நீண்டு அகன்ற கடல்கள் யாவும்; அலகு  இல் மா
களிறு.  தேர் புரவி.  ஆள்  எனை  விராய்  -  அளவற்ற  பெரிய
யானைகளும்   தேர்களும்.   குதிரைகளும்.  காலாட்களும்    என்னும்
நால்வகை வடிவுபெற்றுக் கலந்து; உலகு எலாம் நிமிர்வதே பொருவும்
ஓர்  உவமை  -  உலகம்  முழுவதிலும்  பொங்கிப்  பரவி  வருவதே
ஏற்றதோர் உவமையாகும்.

கணக்கிட    இயலாமையாலும். ஆர்ப்பொலியாலும் கடலும் படையும்
சமம்  ஆயின  என்க.  “நிமிர்வதே” - ஏகாரம்  பிரிநிலை.  ஏழ்கடலும்
நால்வகைச்  சேனை  வடிவம்  பெற்று. உலகம்  முழுவதிலும்  பொங்கி
மிதிலையை    நோக்கி    நகர்ந்தது   என்பது    தயரதன்   சேனை
வெள்ளத்திற்குப்   பொருந்தும்    உவமையாம்   என்றார்.   தன்மைத்
தற்குறிப்பேற்ற   அணி.  உயர்வு   நவிற்சியுமாம்.   மகரம்  -  கடலில்
மட்டுமே  வாழும்  சுறாமீன்.  “கடல்  வாழ் சுறவும்” (தொல். மரபு. 41)
என்பார் தொல்காப்பியனார். இது பற்றி. கடலுக்கு  “மகராலயம்”  எனும்
ஒரு பெயர் வட மொழியில் உண்டென்பர்.                       6