ஆறுதுணை

ஆறுதுணை

bookmark


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். 

கணபதி ராயன் - அவனிரு 
  காலைப் பிடித் திடுவோம்; 
குண முயர்ந் திடவே - விடுதலை 
  கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 

சொல்லுக் கடங்காவே - பரா சக்தி 
  சூரத் தனங்க ளெல்லாம்; 
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி 
  வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 

வெற்றி வடிவேலன் - அவனுடை 
  வீரத்தினைப் புகழ்வோம், 
சுற்றி நில்லாதே போ! - பகையே! 
  துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 

தாமரைப் பூவினிலே - சுருதியைத் 
  தனியிருந் துரைப்பாள் 
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப் 
  புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும் 
  பாதத்தினைப் புகழ்வோம்; 
மாம்பழ வாயினிலே - குழலிசை 
  வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு 
  சிந்தனை செய்திடுவோம்; 
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி 
  திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)