விடுதலைவெண்பா

விடுதலைவெண்பா

bookmark


சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து 
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை 
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து 
பூண்போம் அமரப் பொறி. 

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ 
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட 
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை 
ஐயமெலாந் தீர்ந்த தறிவு. 

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும் 
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு 
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும் 
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். 

வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன் 
காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு 
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று 
சொன்னால் அதுவே சுகம். 

சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும் 
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர் 
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி 
ஆறுதலைத் தந்தாள் அவள்.