அரசியற் படலம் - 175
தசரதன் வேலின் சிறப்பு
175.
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்
யாவரும் வன்மை நேர் எறிந்து - எதிர்த்து வரும் எவருடைய
வலிமைக்கும் ஈடுகொடுத்து நேருக்கு நேர் நின்று வெல்லும் போரை;
தீட்டலால் - அடிக்கடி செய்வதால் ஓரமும். முனையும் மழுங்கி
அவற்றை அடிக்கடி நீட்டுவதாலே; மேவரும் கையடை வேலும்
தேயும்- விரும்புகின்ற கைவிடாப்படைகளான வேலும் வாளும் தேயும்;
கோ உடை நெடு மணி மகுட கோடியால்- தன்னை வணங்கும்
அரசர்களது நீண்டமணி மகுடவரிசையால்; சேவடி அடைந்தபொன்
கழலும் தேயும்- தயரது மன்னனது கால்களில் பொருந்தியுள்ள
பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.
தயரத மன்னனது போரற்றலும். மன்னர் பலரும் பணிந்து
வணங்கும் பெருமையும் கூறப்பட்டது. கையடை - கைவிடாப்படை.
அடிக்கடி போர் செய்வதால். மழுங்குகிறது. மீண்டும் கூர்மை ஆக்கத்
தீட்டுவதால் தேய்கிறது என்பது கருத்து. சிற்றரசர்கள் பலரும் சேவடி
தொழுதலால். அவர்களது மணிமுடிகள் உராய்ந்து பொற் கழல்தேய்கிறது
என்கிறார். இனிப் பகைவரின்மையால் துருவேறி. கறை பிடிப்பதால் -
அடிக்கடி தீட்டுதலால் தேயும் எனவும் கூறுவர். மகுட கோடி: மகுட
வரிசை வேலும் என்பது உபலட்சணத்தால் பிற கருவிகளையும்
குறிக்கும். சேவடி: சிவந்த பாதங்கள். வேலும். கழலும் உம்மைகள்
எண்ணுப்பொருள் உடையவை. 8
