அகலிகைப் படலம் - 561
விசுவாமித்திரன் அகலிகையை ஏற்றுக்கொள்ளுமாறு
கௌதமரிடம் கூறுதல் (561-562)
கௌதமனிடம் அகலிகையைச் சேர்ப்பித்து மூவரும்
மிதிலைப் புறமதிலைச் சார்தல்
561.
அருந் தவன் உறையுள்தன்னை
அனையவர் அணுகலோடும்.
விருந்தினர் தம்மைக் காணா.
மெய்ம்முனி. வியந்த நெஞ்சன்.
பரிந்து எதிர்கொண்டு புக்கு.
கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின். காதி செம்மல்
புனித மா தவனை நோக்கி.*
அருந்தவன் - சிறந்த தவத்தைப் புரியும் கௌதம முனிவனது;
உறையுள் தன்னை - ஆச்சிரமத்தை; அனையவர் அணுகலோடும்
- அவர்கள் மூவரும் அடைந்ததும்; மெய்ம்முனி
-தத்துவ ஞானம் பொருந்திய கௌதம முனிவன்; விருந்தினர்
தம்மைக் காணா - விருந்தினராகிய அவர்களைப் பார்த்து; வியந்த
நெஞ்சன் - ஆச்சரியத்தோடு கூடிய மனம் கொண்டவனாகி; பரிந்து
எதிர்கொண்டு - அன்பு பூண்டு எதிரே போய் (அவர்களை)
அழைத்து வந்து; கடன்முறை பழுதுறாமல் - (விருந்தினர்க்குச்
செய்யக்கூடிய) கடமையாகிய விருந்து உபசரிப்பு சிறிதும்
குறைவுபடாமல்; புரிந்தபின் - செய்த பின்னர்; காதி செம்மல்
- காதி என்னும் முனிவனின் மைந்தனான விசுவாமித்திரன்; புனித
மாதவனை நோக்கி - தவத்தால் தூயவரான அக் கௌதமரைப்
பார்த்து.
வான்மீகச் செய்தி: கௌதமன். தன் மனைவியான அகலிகை.
இந்திரன் ஆகிய இருவரையும் சபித்ததால் நேர்ந்த பாவத்தைப்
போக்கிக் கொள்வதற்காக இமயமலைச் சாரலுக்குச் சென்றான். தனது
ஞானக் கண்ணால் தன் மனைவியின் சாப விமோசனத்தை உணர்ந்து
ஆச்சிரமம் திரும்பி. விருந்தினரை உபசரித்தான். வியந்த நெஞ்சன்:
சிறந்த விருந்தினர் தன் ஆச்சிரமம் வருவதற்குக் காரணமாகத் தான்
செய்த பெருந்தவம் யாதோ என்று வியந்தான். வந்த விருந்தினரை
உபசரிப்பதற்கு உதவியாக உள்ள தன் மனைவியைப் பிரிந்த
நாள் முதல் எந்த விருந்தினரையும் தன் பக்கம் வரக் காணாத
அம் முனிவன். இன்று தன் மனைவியோடு விருந்தினரும்
வருவதைப் பார்த்து வியப்புற்றான் என்றும் கருதலாம். 26
