அகலிகைப் படலம் - 560

bookmark

இராமன் அகலிகையை வணங்கிச் செல்லுதல்

560.

தீது இலா உதவிசெய்த
   சேவடிக் கரிய செம்மல்.  
‘கோது இலாக் குணத்தான் சொன்ன
   பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக
   வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன.
   பொன் அடி வணங்கிப் போனாள்.
 

தீது இலா  உதவி  -  தீமையில்லாத பேருதவியை; செய்த  -
அகலிகைக்குச் செய்தருளிய;  சே   அடிக்   கரிய  செம்மல்  -
செம்மையான திருவடிகளையுடைய கரிய இராமன்;   கோது இலா -
குற்றமற்ற;  குணத்தான்  சொன்ன   -    நற்குணங்களையுடைய
விசுவாமித்திரன்    சொல்லிய;   பொருள்   எலாம்  -  செய்தி
முழுவதையும்;  மனத்தில்   கொண்டு   -   தன்    உள்ளத்தில்
கொண்டு;  அன்னை - (அகலிகையை நோக்கி) தாய் போன்றவளே!;
மாதவன்  அருள் -  மிக்க  தவத்தால்  மேம்பட்ட   கௌதமனது
கருணை; உண்டாக - (உன் பக்கம்)  உண்டாகும்படி;  நீ வழிபடு -
நீ  அவனுக்குப்  பணிவிடை  செய்வாயாக;   படர்     உறாதே -
(இடையிலே உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து)  வருந்தாதே!;
போது  என்ன -  செல்க  என்று  கூற; பொன்அடி - (அகலிகை)
இராமனுடைய   அழகிய  திருவடிகளை;  வணங்கிப் போனாள் -
வணங்கி அப்பால் சென்றாள்.  

தீதிலா உதவி: பிறருக்குத் தீமை பயவாதது; கைம்மாறு கருதாதது;
முன் செய்த உதவியை நோக்காதது. சேவடிக் கரிய செம்மல்: முரண்
தொடை. ஒப்புமை: ‘திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவன்’
- (சிலம்பு: ஆய்ச். குரவை. படர்க்கை. பரவல் 2)              25