வேள்விப் படலம் - 426

bookmark

குசநாபற்கு நூறு பெண்கள் பிறந்தமை

426.

‘அவர்களின் குசநா பற்கே
   ஐ-இருபதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார்
   தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில் - தலைக்கண் ஆயத்து
   எய்துழி. வாயு எய்தி.
கவர் மனத்தினனாய். அந்தக்
   கன்னியர் தம்மை நோக்கி.*
 
அவர்களின்   குசநாபற்கே  -  அந்த   நால்வருள்   ஒருவனான
குசநாபன் என்பனுக்கு;  ஐ  இரு  பதின்மர்  அம்சொல் துவர் இதழ்
தெரிவை  நல்லார்  தோன்றினர்  -  அழகிய  சொற்களும்.  பவளம்
போன்ற  உதடும் கொண்ட பெண்கள் நூறு பேர் பிறந்தனராகி; வளரும்
நாளில் இவர் பொழில் தலைக்கண்  ஆயத்து  எய்துழி - வளர்ந்து
வரும்     காலத்திலே    இப்பெண்கள்    சோலையிலே    தோழியர்
கூட்டத்துடன்  சென்றபோது;  வாயு எய்தி - காற்றுக் கடவுளான  வாயு
தேவன் அங்கே வந்து; கவர்மனத்தினனாய் அந்தக் கன்னியர்தம்மை
நோக்கி   -    கவரப்   பெற்ற   மனத்தை  உடையவனாகி  அந்தப்
பெண்களைப் பார்த்து.

நல்லார்:   பெண்கள்.  ஆயம்:  தோழியர்   கூட்டம்.  ‘தலைக்கண்’
உருபின்   மேல்  உருபு  புணர்ந்து.  கவர்மனம்:   வினைத்   தொகை.
கன்னியர்: கன்னித்தன்மை. நீங்காத  பருவத்தினர்.  ‘அம்சொல்’  நாணம்
தோன்றாமையும்.  ‘துவர்  இதழ்’   செம்மை  குறையாமையும் கன்னியர்
என்பதை உணர்த்தும். குசன் மக்கள் நால்வரில்  ஒருவனான  குசநாபன்
என்பவனுக்கு  நூறு  பெண்கள்; ஒரு நாள் தோழிகளுடன்   சோலைக்கு
அவர்கள்  செல்ல வாயுதேவன் அவர்களை  நோக்கி என்பது  பொருள்
இது குளகப்பாட்டு.                                           7