மிதிலைக் காட்சிப் படலம் - 708
708.
‘கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்.
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்.
என்னை எய்து தொலைக்கும் என்றால். இனி.
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே?
கன்னல் வார்சிலை - கரும்பாகிய நீண்ட வில்லை; கால்
வளைத்தே - வளைத்து; மதன் - மன்மதன்; பொன்னை முன்னிய -
திருமகள் போன்ற சீதையை நினைக்கும் பொருட்டு; பூங் கணை
மாரியால் எய்து - (என்மேல்) தொடுக்கும் மலரம்பு மழையால் எய்து;
என்னை - (யார்க்கும் வலி தொலையாத) என்னை; தொலைக்கும்
என்றால் - வலியழிப்பான் என்றால்; இனி - இனிமேல்; வன்மை
என்னும் இது - வலிமை என்று சொல்லப்படுகின்ற குணம்; யாரிடை
வைகும் - யாரிடத்திலே தங்கியிருக்கும்.
முன்னிய - செய்யிய என்னும் வினையெச்சம். இதுவரை வலிய
வில்லம்புகளோடு கட்டமைந்த உடம்புமுடைய வீரர் யார்க்கும் வலி
தொலையாத நான் இப்பொழுது மெல்லிய கரும்பு வில்லையும் மலர்
அம்புகளையும் உடைய மன்மதனிடம் வலிமை இழக்கும்படி
ஆயிற்றே என்று இராமன் வருந்தினான். 145
