மிதிலைக் காட்சிப் படலம் - 702

bookmark

இராமன் சீதையை எண்ணியவண்ணமாயிருத்தல்

இராமன் சீதையை நினைத்தல் 
 
702.

முனியும் தம்பியும் போய். முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின். இருட்
கனியும். போல்பவன். கங்குலும். திங்களும்.
தனியும். தானும். அத் தையலும். ஆயினான்.
 
முனியும்  -  கோசிக  முனிவனும்;   தம்பியும் - இலக்குமணனும்;
போய்  -  சென்று;  முறையால் - வழக்கப்படியே; தமக்கு இனிய -
தத்தமக்கு இனிமையான;  பள்ளிகள் - படுக்கையிடங்களை; எய்திய -
அடைந்த; பின்   -   பின்பு;  இருள் கனியும்     இருள்  மயமான
கனியை; போல்பவன்   -  ஒப்பவனான  இராமபிரான்;  கங்குலும் -
இரவும்; திங்களும்  -  சந்திரனும்;  தனியும்  - தனிமைப்பாடு என்ற
ஒன்றும்;  தானும்  -   தானும்;   அத்  தையலும் - அச் சீதையாக;
ஆயினான் - ஆனான்.    

இரவில்   நிலா வீசும்பொழுது இராமன் தனியனாகத் தான் இருந்த
நிலையில்    சீதை    பற்றிய    சிந்தனையே    ஆகி    அவளை
உருவெளிப்பாட்டில்    கண்டு   காதல்   மயக்கமுற்றுத்   துயிலின்றி
இருந்தான்  என்பது  கருத்து. இருள்கனி:  கருநிறத்தாலும். யாவராலும்
விரும்பப்படுவதலாலும்     இது     இராமனுக்கு    உவமையாயிற்று.
இருள்கனியும்: உம்மை இசைநிறை.                           139