மிதிலைக் காட்சிப் படலம் - 686
சுனச்சேபன் கோசிகனைக் கண்டு வணங்குதல்
686.
‘அவ் வயின் இழிந்து வேந்தன்
அருங் கடன் முறையின் ஆற்ற.
செவ்விய குரிசில்தானும்
சென்றனன். நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை
முனிவனை ஆண்டுக் காணா..
கவ்வையினோடும் பாத
கமலம்அது உச்சி சேர்த்தான்.
(அப்பொழுது) வேந்தன் - அம்பரீடன்; அவ்வயின் - (கோசிகன்
தவம் புரியும்) அந்த இடத்தில்; இழிந்து - தேரிலிருந்து இறங்க;
அருங் கடன் முறையின் - அரிய கடைக்காலக் கடமைகளை
முறைப்படி; ஆற்ற - செய்வதற்காக; செவ்விய குரிசில்தானும் -
உத்தமனான சுனச்சேபனும்; நியமம் செய்வான் - நடுப்பகலில்
வைதிகக் கடனைச் செய்யும் பொருட்டு; சென்றனன் - (தேரிலிருந்து
இறங்கிப்) போனான்; ஆண்டு - (போனவன்) அந்த இடத்திலே;
அவ்வியம் அவித்த - பொறாமை முதலிய தீக் குணங்களை நீக்கிய;
சிந்தை முனிவனை - தூய மனத்தனான கோசிக முனிவனை; காணா-
கண்டு; கவ்வையினோடும் - துன்பத்துடனே; பாத கமலம் அது -
திருவடித் தாமரைகளை; உச்சி சேர்த்தான் - தலைமேல் சூடினான்.
கவ்வை: மரண அச்சம் 123
