மிதிலைக் காட்சிப் படலம் - 590

bookmark

590.

‘பெருந் தேன் இன் சொல் பெண் இவள்
   ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும் தான்’ என்றால். நான்முகன்
   இன்னும் தரலாமே?-
அருந்தா அந்தத் தேவர்
   இரந்தால். அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது. என் இனி
   நல்கும் மணி’ ஆழி?
 
பெருந்தேன் இன்சொல் - பெருமை மிக்க தேன் போன்ற இனிய
சொல்லையுடைய; பெண் இவள்  ஒப்பாள்  -  இந்தப்  பெண்ணை
ஒப்பவளான;  ஒரு  பெண்ணைத்  தான்  த(£)ரும்  -    (சிறந்த)
ஒரு பெண்ணை நீ படைத்துத் தருக; என்றால் - என்று   (தேவர்கள்
திரண்டு  வந்து)  வேண்டினாலும்; நான்முகன்  இன்னும்  தரலாமே
- (படைத்தல் கடவுளான)  நான்கு முகங்களையுடைய  பிரமனால்தான்
இனிமேல் படைக்க முடியுமோ? (முடியாது); அருந்தா - (அமுதத்தைத்
தவிர வேறொன்னையும்) உண்ணாத;  அந்தத் தேவர் - சிறப்புடைய
அத்தகைய தேவர்கள்;  இரந்தால் - (திரண்டு வந்து) வேண்டினாலும்;
மணி ஆழி  -  இரத்தினங்களுக்கு  இருப்பிடமான  கடல்; அமிழ்து
என்னும்  -  அமுதம்  என்று  சொல்லக்கூடிய; மருந்தே அல்லாது
- சிறந்த மருந்தையே மீண்டும் கொடுப்பதல்லாமல்; இனி என் நல்கும
-இனி வேறு எதனைக் கொடுக்க இயலும்?  

எடுத்துக்     காட்டு உவமையணி: அமுதத்தை அல்லாமல் அதை
விடச்    சிறந்த    ஒரு   பொருளைக்   கடலால்   தர   முடியாது:
அதுபோலத்தான்    படைத்துப்    பழகிய    மாதரைப்    போன்ற
பெண்களையல்லாமல்   இச்   சீதையைப்  போன்ற  சிறந்த  மங்கை
ஒருத்தியைப்   பிரமனாலும்  படைக்க  இயலாது.   இன்னும்-இதுவரை
படைக்கப்பட வில்லை என்பதை உணர்த்தும்.                  27