மிதிலைக் காட்சிப் படலம் - 591
591.
அனையாள் மேனி கண்டபின்.
அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை
ஆதி மிளிர் வேற் கண்
இனையோர். உள்ளத்து இன்னலியோர்;
தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண்மதிக்கு
என்றும் பகல் அன்றே?
அண்டத்து - விண்ணுலகில்; அரசு ஆளும் - ஆட்சிபுரிகின்ற;
வினையோர் - நல்வினையுடைய இந்திரன் முதலான தேவர்கள்;
மேவும் - விரும்புகின்ற; மேனகை ஆதி - மேனகை முதலான;
மிளிர்வேல் கண் - ஒளிமிக்க வேல் போன்ற கண்களையுடைய ;
இனையோர் - இத் தெய்வப் பெண்கள்; அனையாள் மேனி
- அந்தச்சீதையின் மேனியழகை; கண்டபின் - பார்த்த பின்பு;
உள்ளத்து இன்னலினோர் - (தத்தம் அழகெல்லாம் சேர்ந்தாலும்
அவளது அழகு ஒன்றுக்கும் ஈடாகாது என்று அறிந்து) மனத்தில்
சஞ்சலத்தைக் கொண்டவரானார்கள்; ?தம் முகம் என்னும் - (மேலும்)
அந்த மேனகை முதலான பெண்களின் முக மண்டலம் என்கின்ற;
பனிதோய் வானின் - குளிர்ச்சி நிறைந்த வானத்தில்; வெண்மதிக்கு
- விளங்கும் வெண்ணிறமான சந்திரமண்டலத்திற்கு; என்றும் பகல்
அன்றே - (பகல் இரவு என்னும் வேறுபாடு இல்லாமல்)
எப்பொழுதும் பகலாகவே இருக்கும்.
தெய்வப் பெண்கள் முகம்: மேனகை முதலான தெய்வ மகளிர்
சீதையின் மேனியழகைக்கண்டு நம்முடைய அழகு இதற்கு ஈடாகாது
என்று மனம் வாடினர். அதனால் அவர்களின் முகம் பகல்நிலாவைப்
போல எப்பொழுதும் ஒளி மழுங்கியிருக்கும் என்பது கருத்து. 28
