பொட்டி சிறீராமுலு
வாழ்க்கை வரலாறு பொட்டி சிறீராமுலு ஒரு இந்திய விடுதலைப்போராட்ட வீரராவார். இவர் சொந்த ஊரான படமட்டிபள்ளி, அப்போது பழைய நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக பிரகாசம் மாவட்டத்தில் 16 மார்ச் 1901 ஆம் ஆண்டு குருவைய்யா, மகாலட்சுமி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுவதில் செலவிட்டவர்.சிறீராமுலு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் போராட ஆரம்பித்தார். 1930-இல் உப்புச் சத்தியாகிரகத்திலும், 1941-1942 காலகட்டத்தில் தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு மும்முறை சிறைத்தண்டனைப் பெற்றார். நெல்லூரில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் போன்றவற்றில் தலித் மக்கள் நுழைவதற்காகப் பிரச்சாரம் செய்து உரிமைகளைப் பெற்றுத்தந்தார்.சிறீராமுலு ஆந்திர மாநிலம் உருவாகத் தன்னையே தியாகம் செய்ததால் ஆந்திர மாநிலத்தவர்களால் அமரஜீவி என்று போற்றப்பட்டார். அவர் சென்னை மாகாணத்தில் உள்ள தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்துத் தனிமாநிலமாக்க, துவக்கிய உண்ணாவிரதப் போராட்டத்தால் பிரபலமானார். அவரது மரணம் பெரும் கலவரத்துக்குக் காரணமானது. இதனால் அப்போதைய இந்தியப் பிரதமரான சவகர்லால் நேரு ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.பொட்டி சிறீராமுலு சென்னையில் மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் 126ஆம் எண் கொண்ட வீட்டில் இறந்தார். இவர் நினைவாக இந்த வீட்டை ஆந்திர மாநில அரசு நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கிறது.
