பரசுராமப் படலம் - 1394
தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல் ((1394-1395))
தசரதன். பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பல்
1394.
நண்ணினர். இன்பத்து வைகும் நாளிடை.
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்.
அண்ணல். அப் பரதனை நோக்கி. ஆண்தகை.
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்:
நண்ணினர் - (யாவரும் அயோத்தியை) அடைந்தவர்களாய்;
இன்பத்து வைகும் நாளிடை - இன்பத்தில் திளைக்கும் நாளில் (ஒரு
நாள்); ஆண்தகை - ஆண்மைப் பண்புகள் நிறைந்தவனும்; மண்ணுறு
முரசு இனம் வயங்கு தானையான் - மார்ச்சனை பொருந்திய
பேரிகைகளின் கூட்டம் விளங்குகின்ற சேனையையுடையவனுமான
தயரதன்; அண்ணல் அப்பரதனை நோக்கி - பெருமைக்குரிய
அப்பரதனைப் பார்த்து; எண்ணருந் தகையது ஓர் பொருள் -
யாவரும் எண்ணாத ஒரு பொருளை; இயம்புவான் - சொல்லலானான்.
மார்ச்சனை: தோற்கருவிகள் சிலவற்றுள் தக்கவாறு
ஒலியெழும்புதற்கேற்ப அடிக்கும் இடத்தைத் தகுதியாக அமைத்தற்கு
உதவுவது. “அண்ணல் அப்பரதன்” எனும் தொடரில் அடைமொழிகள்
பரதன் மாட்டுக் கவிஞர் பிரானுக்குரிய மதிப்பினைக் குறித்து நின்றன.
இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்; அதற்குப் பரதன் தடையாய்
இருத்தல்கூடும் என்று தயரதன் எண்ணியிருக்கலாம் என்பதை.
ஒருவாறு உய்த்துணருமாறு. “எண்ணருந்தகையது ஓர்பொருள்” எனும்
தொடரைக் கவிஞர் பிரான் அமைத்தார் எனக் கருதலாம். 46
