பரசுராமப் படலம் - 1374

bookmark

1374.    

‘ஒரு கால் வரு கதிர் ஆம் என
   ஒளி கால்வன. உலையா
வரு கார் தவழ் வட மேருவின்
   வலி சால்வன. வையம்
அருகா வினை புரிவான் உளன்:
   அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும்
   ஏலாதன. மேல் நாள்;
 
ஒருகால் வரு கதிராம்- ஒற்றைச் சக்கரத்தினையுடைய தேரின் மீது
வருகிற  சூரியன்;  என ஒளிகால்வன - என்னுமாறு  ஒளி விடுவனவும்;
உலையா  -   (எளிதில்)   அழிக்கப்படாதனவும்;   வருகார்   தவழ்
வடமேருவின் வலி  சால்வன  -  வானில்  தவழும் மேகம் உலாவும்
வடமேரு  மலையினது  வலிமை  பொருந்தியனவும்;  வையம்  அருகா
வினை புரிவான்  உளன் அவனால் அமைவனதாம் - நிலவுலகத்தார்
நெருங்குதற்கும் இயலாத (தெய்வத் தன்மையுள்ள) சிற்பத்   தொழிலைப்
புரிபவனான   விசுவ  கர்மாவினால்  (வடிவு)    அமைக்கப்பட்டனவும்;
யாவையும்    ஏலாதன    -   எவற்றையும்   தமக்கு   உவமையாக
ஏற்காதவையுமாகிய; இருகார் முகம் -இரண்டு விற்கள்; மேல்நாள் உள
- முற்காலத்தில் இருந்தன.

“ஒருகால்   வரு கதிர்” என்பதில் கால் என்பது சினையாகுபெயராய்.
ஒரு  காலையுடைய சூரியன் தேரினைக் குறித்தது.  வையம் -  இடவாகு
பெயராய் வையத்து மக்களைக்  குறித்து  நின்றது. “அவன்  திறமைக்குப்
பக்கத்தில்  யாரும்  செல்ல   முடியாது”  எனும்  வழக்கையும்கொண்டு.
“வையம்   அருகா    வினைபுரிவான்”   என்று   விற்களையுருவாக்கிய
விசுவகர்மனைப் புகழ்ந்தார்.

இது முதல் ஆறு கவிகள் - சிவதனுசின் வரலாறு.              26