பரசுராமப் படலம் - 1366

bookmark

இராமனிடம் பரசுராமன் கூறியது

பரசுராமன் சினவுரை
 
1366.
 
‘இற்று ஓடிய சிலையின் திறம்
   அறிவென்; இனி. யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை
   புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு
   தினவும் சிறிது உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது
   என் வரவு’ என்றனன் உரவோன்.
 
யான். இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்-நான். (முன்னமே
நீ)  முறித்து ஒழித்த வில்லின் திறத்தை (அது  முன்பே  முறிந்திருந்தது
என்பதை)  அறிவேன்;  இனி  உன்  பொன்  தோள்வலி  நிலை -
இப்பொழுது   நான்   உன்னுடைய   அழகிய   தோள்   வலிமையின்
நிலையை; சோதனை  புரிவான் நசை உடையேன் - சோதித்து அறிய
விருப்பம் சிறிது உடையேன்; செற்று - (அரசர்களை) அழித்து;   ஓடிய
-  மேம்பட்ட;  திரள்  தோள் உறு  தினவும் - திரண்ட தோள்களில்
பொருந்தின  தினவும்  சிறிது  எனக்கு உண்டு; இங்கு இது என் வரவு
மற்று  ஓர்  பொருள் இ(ல்)லை - இங்கு எனது வருகைக்குக் காரணம்
இதுவே வேறு ஒரு காரணமும் இல்லை என்று; உரவோன் என்றனன் -
வலிமை மிக்க பரசுராமன் கூறினான்.

சிவ  பெருமான் வில் முன்பே முறிந்தவில்;அதனை முறித்ததற்காகக்
கர்வங்   கொள்ளாதே   எனக்    குற்றம்கூறும்    பரசுராமன்   தான்
மிகப்பெருங் கர்வத்தோடு பேசுகிறான்; கர்வங் கொள்பவர்  தன்  குற்றம்
அறியார்  என்பது குறித்தார்.  புரிவான் -  பொருட்டுப்பொருளில் வந்த
வினையெச்சம். உன் தோள் வலிவைச்  சோதனையிடவும்.  என்  தோள்
தினவைச்     சிறிது     அடக்கிக்    கொள்ளவும்    ஆகிய    இரு
செயல்களுக்காகவே   இங்கு   வந்தேன்;    வேறோர்   காரியமில்லை
என்கிறான் பரசுராமன்.                                       18