பகுதி 19
சந்திரசூடன் நேரே மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். அதற்குள் மனோமணியும் அங்கே வந்திருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தின் பலகணி வழியாகப் புலி தென்னை மரத்தில் ஏறியதையும் பிறகு நடந்தவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட திகிலின் படபடப்பு இன்னும் முழுவதும் போகவில்லை. குழந்தையைக் கட்டி அணைத்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையும் மழலைச் சொல்லில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
சந்திரசூடனைப் பார்த்ததும் மனோன்மணியின் கண்ணில் கண்ணீர் ததும்பியது.
"எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். குழந்தையைக் காப்பாற்றினீர்கள். தங்களுக்கு எந்த விதத்தில் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை" என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள்.
"நன்றி சொல்வதற்குக் காலம் வரும்; அப்போது சொல்லுகிறேன்" என்றான் சந்திரசூடன்.
"குழந்தை இப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தான், தெரியுமா? நீங்கள் புலியை இவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறேன் என்றீர்களாம். அப்படியே செய்து விட்டீர்களாம். அந்த முரட்டு மாமா அநியாயமாய்ச் சுட்டுக் கொன்று விட்டாராம்!"
இதற்குள் ராஜ்மோகன், "மாமா! எனக்கு ஒரு புலியும் துப்பாக்கியும் வாங்கி தரேளா?" என்று கேட்டான்.
"ஆகட்டும் பாப்பா! உனக்குப் புலியைக் கண்டால் பயமாயில்லையா?" என்றான் சந்திரசூடன்.
"எனக்குப் புலிகிட்டப் பயமில்லை. பூனை கிட்டத்தான் பயம்!" என்றான் ராஜ்மோகன்.
"மலைமேல் உங்களைத் துப்பாக்கியால் சுடப் பார்த்தது என்கிறீர்களே? அதன் பொருள் இன்று தான் விளங்குற்று! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னதன் காரணமும் இப்போதுதான் புரிகிறது!" என்றாள் மனோன்மணி.
"ஆமாம்; இன்னும் இரண்டு மூன்று நாள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உயில் தயாராகி விட்டது. ரிஜிஸ்டராவது தான் பாக்கி. உயில் ரிஜிஸ்ராகி இந்தப் பையனை அவனுடைய தாத்தாவிடம் சேர்ப்பித்து விட்டால்..."
"அது முடியும் என்று நினைக்கிறீர்களா?"
"தாங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் முடியும்?"
"ஐயோ! அப்புறம் நான் என்ன செய்வேன்?"
"செய்வது என்ன? யாராவது மனசுக்குப் பிடித்தவனைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு எப்போதும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பது!"
மனோன்மணி தயங்கித் தயங்கி, "தாங்கள் இவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். ஆனால் தங்களிடம் நான் முழு உண்மையையும் சொல்லவில்லை!" என்றாள்.
"ஓஹோ! உண்மையில் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்திருக்கிறீர்களா?"
இச்சமயம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதிசயத்திலெல்லாம் அதிசயம்! பண்ணையார் சங்கரசேதுராயர் வந்து கொண்டிருந்தார்.
மனோன்மணி பதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். குழந்தை ராஜ்மோகன் அவளைக் கட்டிக் கொண்டு எழுந்திருப்பதைத் தடை செய்ய முயன்றான்.
"உட்காரு, அம்மா, உட்காரு! இந்தக் குழந்தை இன்று பிழைத்தது புனர்ஜன்மம்!" என்றார் பண்ணையார்.
"பல விதத்தில் அதற்கு இன்றைக்குப் புனர்ஜன்மந்தான்! உட்காருங்கள்!" என்று சந்திரசூடன் நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.
