பகுதி 20

bookmark

பண்ணையார் உட்கார்ந்து, "வீதி முனையில் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்! கரணம் தப்பினால் மரணம் என்று இருந்தது. புலி இந்த வீட்டுப் பக்கம் பாய்ந்திருந்தால்! அல்லது துப்பாக்கிக் குண்டு தவறிப் பட்டிருந்தால்...? ஓய்! உம்மை என்னவோ என்று நினைத்தேன். வெகு தைரியசாலி! நீர் அப்படிப் பாய்ந்து ஓடிக் குழந்தையை எடுத்திராவிட்டால்...?" என்றான்.

"எல்லாம் கடவுளுடைய செயல்! நம்மால் என்ன இருக்கிறது?" என்றான் சந்திரசூடன்.

"கடவுளும் மனித ரூபத்தில்தானே காரியம் செய்ய வேண்டியிருக்கிறது? நானும் என் மனையாளும் இந்தச் சாலையில் உலாவ வரும் போதெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்ப்போம். 'இம்மாதிரி ஒரு குழந்தை நம் வீட்டில் வளரக் கூடாதா?' என்று என் மனையாள் ஜபம் செய்வாள்."

சந்திரசூடன், "இந்தக் குழந்தையையே வளர்த்தால் போகிறது" என்று முணுமுணுத்தான்.

"என்ன சொன்னீர்?" என்று கேட்டார் பண்ணையார்.

"ஒன்றுமில்லை. உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது என்றேன்."

"நூற்றில் ஒரு வார்த்தை! பாப்பா! இங்கே வா! என்னிடம் வா! தாத்தாவைக் கண்டால் உனக்குப் பயமாயிருக்கிறதா" என்றார் பண்ணையார்.

"அவன் புலியைக் கண்டே பயப்படவில்லையே?" என்று சொன்னான் சந்திரசூடன்.

"எனக்குப் பூனைகிட்டத்தான் பயம். புலி கிட்டப் பயமில்லை" என்று சொன்னான் ராஜ்மோகன்.

"உனக்குப் புலி மொம்மை வாங்கித் தருகிறேன். என்னிடத்தில் வா" என்றார் பண்ணையார்.

ராஜ்மோகன் எழுந்து நடக்கப் பார்த்தான். மனோன்மணி அவனைத் தூக்கிக் கொண்டு வந்து பண்ணையார் அருகில் விட்டாள்.

"குழந்தை ஒரு கால் சற்றுக் குட்டை; நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்படும்" என்றான் சந்திரசூடன்.

"அடடா! அப்படியா! நானும் என் மனையாளும் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இந்தக் குழந்தை எப்போதும் கை வண்டியிலேயே உட்கார்ந்திருக்கும். அதன் காரணம் இப்போதுதான் புரிகிறது" என்றார் பண்ணையார்.

"கைவண்டியில் உட்கார வைத்து பெல்ட்டினால் கட்டிப் போட்டு விட்டு இந்த அம்மாள் காரியத்தைப் பார்ப்பாள். இல்லாவிட்டால் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். பாருங்கள்! இன்றைக்குக் கொஞ்சம் கவனிக்காமற் போகவே, எப்படியோ மதில் மேல் ஏறி உட்கார்ந்து விட்டான்." பண்ணையார் குழந்தையைத் தட்டிக் கொடுத்து, "ஜாக்கிரதையாய்க் குழந்தையைப் பார்த்துக் கொள், அம்மா. திருஷ்டி கழித்துப் போடு" என்றார்.

மனோன்மணி பண்ணையாரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

பண்ணையார் சந்திரசூடனைப் பார்த்து, "நான் போய் விட்டு நாளைக்கு என் மனையாளையும் அழைத்துக் கொண்டு வருகிறேன். அவளும் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுவாள், நீங்கள் ஏதோ முக்கியமான காரியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது!" என்று சொல்லி விட்டு எழுந்தார்.

"அப்படி முக்கியமான விஷயம் ஒன்றுமில்லை, கலியாண விஷயந்தான்!" என்றான் சந்திரசூடன்.

"கலியாணமா? யாருக்குக் கல்யாணம்?"

"இன்னும் நிச்சயமாகவில்லை. பேச்சுத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கலியாணம் ஆகவில்லையா என்று நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? 'தகுந்த மணப்பெண் கிடைக்கவில்லை' என்று பதில் சொன்னேன். மிஸ் மனோன்மணியைப் பார்த்த பிறகு அந்த அபிப்பிராயம் மாறி விட்டது."