பகுதி 15
"உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது."
"நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். 'இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்' என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை."
"மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்" என்றாள் மனோன்மணி.
"அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சந்திரசூடன்.
இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். "இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!" என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
