பகுதி 16
சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி 'காபரா' அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.
'புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்' என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.
இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் 'சமர்த்து மாமா'வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.
"மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!" என்றான்.
"ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்" என்று சொன்னான் சந்திரசூடன்.
பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.
